கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நாங்கள் போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை அது எமது நோக்கமும் அல்ல என்று குறிப்பிட்ட மாவை,
புதிய எதிர்க்கட்சி நியமனம் தொடர்பில் நாம் அரசியலமைப்பு ரீதியாகவும், தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையிலுமே நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினோம் என்றார்.
ஜனாதிபதியோ, பிரதமரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ எவராக இருந்தாலும் ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினால், அவர் தன்னுடைய உறுப்புரிமையை இழப்பார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடமுண்டு. அதைத்தான் எமது தரப்பு நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியது.
மகிந்த ராஜபக்ச, சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் அக்கட்சியிலிருந்து வேறு கட்சியில் இணைந்துகொண்டால் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகும் என்பதையே எடுத்துக் கூறினோம்.
இருந்தபோதும் இந்த விவகாரத்தில் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை. சிலர் அதனை நீதிமன்றம் சென்று தான் தீர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி புதிய அரசியலமைப்புக்கான வரைபை சபையில் முன்வைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அதனை முன்வைத்த பின்னரே அது தமிழ் மக்களாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதை ஆராய முடியும். பெப்ரவரி 4 ஆம் ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது பற்றி ஆராய முடியும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிக்கப்படுவதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இதற்கும் நீதிமன்றம் சென்று தீர்வைப் பெற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.