நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழ்கு தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ- 9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். பின்னர் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்பதற்கு சர்வதேச சமூகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினர்.
தமது பிள்ளைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர். புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் அதனை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலிறுத்தி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மைத்திரி- ரணில் ஏமாற்றிவிட்டாக போராட்டத்தில் பங்குப்பற்றிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.