நடப்பு நிதியாண்டுக்காக சர்வதேச நாணய நிதியம். உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என்பதால், 2019 ஆம் ஆண்டு நடப்பு நிதியாண்டுக்கான அரச செலவீனங்களுக்காக இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து நிதியைப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக நிதியமைச்சின் உயர் அதிகாரி கூறினார்.
இந்த நிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் முன்று பிரதான வேலைத் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகெய்கோ நாகாவோ ஆகியேர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அதிகாரபூர்வமாக பயணம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வியாழக்கிழமை நேரில் சென்றிருந்தார்.
இதன்போதே இந்த இந்த உடன்படிக்கை செய்யப்பட்டதாக மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அதேவேளை, 300 மில்லியன் டொலரகள் கடனாக சீன வங்கி (Bank of China) வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட கடன்களில் 2.6 பில்லியன் டொலர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதனால் சீன வங்கியிடம் இருந்து 300 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
5.9 பில்லியன் டொலர்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கடனாகப் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.