இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் மைத்திரிபால சிறிசேன முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் போதைப்பொருள் பாவனையை மக்கள் மத்தியில் இருந்து இல்லாது ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்தாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறிருப்பினும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரான சூழலில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சட்டவிரோத போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் போதைப் பொருள் பயன்பாடு இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படுவதுடன் இதனால் அதிகளவு போதைப் பொருள் பயன்படுத்தும் பகுதியாக இலங்கையில் வட பகுதி கடந்த காலங்களில் பெயரிடப்பட்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து இலஙடகை இராணுவதின் உதவியுடன் போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்றுவருவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது மாத்திரமன்றி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சா போதைப்பொருள் இலங்கை கடற்படையின் உதவியுடனேயே நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு இலங்கை இராணுவம் வடபகுதியில் போதைப் பொருள் பாவனையைத் தூண்டி தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.