நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் உடுவில் - ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், வீட்டினுள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நொருக்கி சேதமாக்கியதுடன், வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் தாக்குதலை மேற்கொண்டதாகவும், தாக்குதலாளிகள் தப்பிச்செல்லும் போது தாம் கொண்டு வந்திருந்த வாள் ஒன்றினை தவறவிட்டு தப்பி சென்றதாகவும் வீட்டில் இருந்தோர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ, யாழ்ப்பாணத்தில் இயங்கிய வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
ஏற்கனவே கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவங்கள் இலங்கை அரச தரப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், மீண்டும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு தாக்குதல் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.