இந்த வாகனப் பேரணி, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்படும். பின்னர் மன்னாரை வந்தடையும்.
அதன் பின்னர் வவுனியா, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஊடாகச் சென்று எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் நிறைவடையும். அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதேசத்தில் ஆரம்பமான இந்த வாகனப் பேரணியில் கலந்துகொண்டவர்களை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள், இலங்கைப் பொலிஸார் புகைப்படங்களை எடுத்து கண்காணித்ததாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்பது என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ள இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு சிங்கள இடதுசாரி இயக்கங்கள், பொது அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.