தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் என்ற பெயரில் இந்த வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் காணிகளை மீட்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் இருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி, நேற்றுப் புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததுடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்தன் ஊடாக கிளிநொச்சியை அடைந்து அங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது. இன்று பூநகரி ஊடாக மன்னார், வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
ஊர்வலம் எதிர்வரும் இரண்டாம் திகதி கொழும்பைச் சென்றடைந்ததும் இலங்கை ஜனாதிபதி செலயக முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.