ஜெனீவா திருவிழா வழமை போன்று ஆரம்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள் - விக்னேஸ்வரன் சாடல்

நடந்த கொடூரங்களைக் காலக்கெடு கொடுத்து மறைத்து விடவா ஐக்கிய நாடுகள் சபை இருக்கின்றது?
பதிப்பு: 2019 மார்ச் 13 06:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 06:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Tamilgenocide
#Srilanka
#Genevasession
#Vickneswaran
#TNA
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அது வரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருக்கின்றன. எம்மால் அது முடியாது. தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வழமை போன்று ஜெனீவா திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விடயத்தில் முழுமையான உண்மையான விசாரணை இடம்பெற்று நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும், நீதி கிடைக்கும். நடந்த கொடூரங்களைக் காலக்கெடு கொடுத்து மறைத்து விடவா ஐக்கிய நாடுகள் சபை இருக்கின்றது? ஏற்கனவே 10 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. கால அவகாசம் எதற்கு?

இலங்கை ஏதாவதொரு கடப்பாட்டை நடைமுறைப்படுத்த முன்வந்தால்த் தான் சர்வதேசக் கண்காணிப்பு இடம்பெறும். முன்வராவிட்டால் கால அவகாசம் வழங்குவதால் வரும் இலாபம் என்ன?

கொடூரமான கொலையாளிகளைத் தமது துணிச்சல் மிக்க வீரர்கள் என்று தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்கள் அடையாளப்படுத்தும் வரை எந்த ஒரு பிரேரணையின் நடைமுறைப்படுத்தலும் நடைபெறாது. கால அவகாசம் கொடுத்தாலும் அது நடைபெறாது. சவேந்திர சில்வாவுக்கு அதியுயர் இராணுவ பதவி கொடுத்திருப்பதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருட காலக்கெடு 2017ல் கொடுத்தபோது அடுத்த இரு வருடங்களில் எதுவும் நடைபெறாது என்று அமெரிக்க உயர் அதிகாரி நிஷா பிஸ்வால் அவர்களுக்குக் கூறினேன். 'இல்லை பிரேரணையை நடைமுறைப்படுத்தவே கால அவகாசம் கொடுக்கின்றோம்' என்றார். 'நீங்கள் அவ்வாறு கூறிவிட்டு, கால அவகாசம் கொடுத்துவிட்டுப் போய் விடுவீர்கள். இலங்கை அரசாங்கத்தை நடைமுறைப்படுத்த வைக்க யார் வருவார்கள்?' என்று கேட்டேன். 'நாங்கள் உங்களுடன் தான் எப்பொழுதும் இருப்போம்' என்றும் தமிழர்களின் நலனைத் தாமும் நாடுவதாகக் கூறினார். இன்று என்ன நடந்துள்ளது? அமெரிக்கா எங்கே? அவர்கள் பின்னால் இருப்பதாகக் கூறினாலும் முன்னால் வரமுடியாமலேயே அவர்கள் பின்னால் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கேற்பட்ட உயிரழிவை, கொடூரத்தை வரவேற்றவர்கள் இலங்கை அரசாங்கத்தினர். இன்றும் கொலையாளிகளைத் தூக்கி வைத்தே பேசுகின்றார்கள். அத்துடன் அன்றிருந்தவர்களிடையே பசிலை விட கோத்தபாயாவுக்கே ஆதரவு இன்றும் அதிகம். அந்த விதத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களும் போர்க் குற்றங்களாவன குற்றங்கள் அல்ல, அவை எமது போர் வீரர்களின் துணிச்சல் மிக்க வீரமே என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

ஆகவே யார் பிரேரணையை நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள்? கால அவகாசம் என்னத்தைப் புதிதாக இயற்றித் தரப் போகின்றது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அது வரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருப்பன. எம்மால் அது முடியாது. தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியாமல் இருக்கின்றது.

ஜெனிவாவில் ஒரு முகம் இலங்கையில் ஒரு முகம் காட்டுகின்றது இலங்கை அரசாங்கம். அத்துடன் தமக்குள்ளேயே வெவ்வேறு முகங்களையும் காட்டி வருகின்றனர். சுயநல காரணங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குகின்றது.

முழுமையான உண்மையான விசாரணை இடம்பெற்று நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும், நீதி கிடைக்கும். நடந்த கொடூரங்களைக் காலக்கெடு கொடுத்து மறைத்து விடவா ஐக்கிய நாடுகள் இருக்கின்றது? ஏற்கனவே 10 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. கால அவகாசம் எதற்கு? என சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.