அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் ஆலோசனை வழங்க முடியாதென்றும் பிமல் ரட்நாயக்கா கூறினார்.
பிமல் ரட்நாயக்க இவ்வாறு கூறியபோது அமைச்சர்கள் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை மாத்திரமே. இதற்குத் தேவையான யோசனைகளை சர்வதேச நாடுகள் முன்வைக்க வேண்டிய அவசியமேயில்லை.
அத்தோடு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மட்டத்தில் தடையாகவுள்ள சட்டதிட்டங்களையும் அரசாங்கம் சுட்டிக்காட்ட வேண்டும் என்றார்.
ஜெனீவாக் கூட்டத் தொடரின் ஒவ்வொரு அமர்விலும் குற்றவாளிகள் போன்றே இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். போர்க்குற்றம் புரியாத நிலையில் குற்றவாளிகள் போன்று ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் பிமல் ரட்நாயக்கா கூறினார்.
இதேவேளை, இலங்கைக்கு சர்வதேச நாடுகள் யோசனைகளை முன்வைக்க வேண்டிய அவசியமில்லையென, ஜெனீவாவுக்குச் சென்று வந்த வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணைக்குரிய சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற முறைக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு நிராகரித்திருந்தனர்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை நிராகரித்திருந்தார்.