ரணில் தலைமையிலான அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதை ஜனாதிபதி என்ற அடிப்படையில் நிராகரித்துள்ளதாகவும், ஆனாலும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இலங்கைக்கு ஏற்புடையதான விடயத்தை மாத்திரமே பரிசீலிக்க முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இலங்கையின் இறைமைக்கு ஆபத்தான விடயங்களை ஏற்க முடியாது. அதை நடைமுறைப்படுத்தவும் முடியாது. மிகவும் உறுதியாக இதனைக் கூறுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்குமாறு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அந்தக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே ஜனாதிபதி என்ற முறையில் நிராகரித்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையிடம் நேரடியாகக் கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜெனீவா செல்விருந்த தூதுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன எழுதியிருந்த அறிக்கையில் இறுதி நேரத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தான் மாற்றம் செய்யதாகவும் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை கூட வேறு சிலரினால் எழுதப்பட்டிருந்தது எனவும் மைத்திரிபால சிறிசன குற்றம் சுமத்தியிருந்தார்.
இணை அனுசரணை வழங்கியமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். ஜே.வி.பியும் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனாலும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிக் கட்டமைப்பை நிராகரித்தமைகை்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு பாராட்டும் தெரிவித்திருந்தனர்.