இலங்கையில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்ரோபா் மாதம் வெளியிடப்பட வேண்டுமென்கிறார் டளஸ்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக்கூடிய வாய்ப்பு இல்லையென்கிறார் மஹிந்த தேசப்பிரிய
பதிப்பு: 2019 ஏப். 09 14:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 14:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமானால் இந்த ஏப்பிரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் திருத்தங்கள் எதுவும் இல்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாவரி மாதம் எட்டாம் திகதியோடு மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைவதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அறிவிக்கப்பட வேண்டும்.
 
ஆகவே மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒக்ரோபர் மாதம் ஐந்தாம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற வேண்டுமெனவும் டளஸ் அழகப் பெருமா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்று இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கான திருத்தங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் இதனால் இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாதெனவும் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகார் கரு ஜயசூரியவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலம் தாமதித்தமையினால் எந்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தலாம் என்பது தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியானம் கோருமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மஹிந்த தேசப்பிரிய மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றதிடம் வியாக்கியானம் கோருமாறும் ஜனாதிபதி மாத்திரமே உயர் நீதிமன்றதிடம் வியாக்கியானம் கோரு முடியுமெனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை அல்லது ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் நடத்த பிரதான அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாகவும் ஆனாலும் அது சட்டத்திற்கு முரணானது என்றும் ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரட்ணாநய்கா கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்பும் மௌனமாக இருப்பதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.