சென்ற ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியா நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான முன் அறிவித்தல் கட்டளைகள் கோட்டாபய ராஜபக்சவிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் இந்த வழக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை பாதிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசரியர் பீரிஸ் கொழும்பில் செய்தியளர்களிடம் கூறியிருந்தார்.
2009ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி கொழும்பு கல்கிஸையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் வார இதழின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்திலுள்ள நீதிமன்றில் வழக்கொன்றை பதிவு செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கைப் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்பட்ட இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை தடுத்துவைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட கனேடிய பிரஜையான ஈழத்தமிழர் ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவரும் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரின் சார்பில் உலகின் முன்னணி சட்ட நிறுவனமான ஹவுஸ்பெல்ட் சர்வதேச சட்ட நிறுவனமும், ITJP என்ற இலங்கையின் நீதிக்கும், உண்மைக்குமான செயற்திட்டமும் இணைந்து இந்த வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளன.
இந்த நிலையில் இன்று கொழும்புக்கு திரும்பிய கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் தமிழர்களும் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் செயற்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் உள்ள சில பிரமுகர்களும் பின்னணியில் செயற்படுவதாகவும் அமெரிக்கா கலிபோர்னிய கொன்செல் அலுவலகமும் இதற்கு ஒத்துழை்ப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள தனது சட்டத்தரணிகள் கலிபோர்னிய நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்துச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்வதற்கான ஆவணங்கள் அனைத்தையும் கையளித்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை இலங்கையில் இருந்தும் செய்ய வேண்டியுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.