நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்திரை வருடப்பிறப்பு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் ஆனாலும் சிங்கள அரசியல்வாதிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தினர். சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தரவில்லை எனவும் அவர்கள் குறைகூறினர்.
தமிழ் அரசியல் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் கவனம் செலுத்துவதில்லை என்றும் தேர்தலில் மாத்திரம் வெற்றிபெறும் நோக்கில் செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் தமிழ்க் கட்சிகள் எதற்கும் வாக்களிக்க முடியாது. தேர்தல் அரசியலைக் கைவிட்டு ஈழத் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்களை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.