தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு வழங்குவதோடு நின்றுவிடாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணி குறித்து அறியுமாறும், சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்ததாகவும் பேராயர் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரையும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்று குற்றம் சுமத்திய பேராயர் மெல்கம் ரஞ்சித், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணை நடவடிக்கைகளிலும் அதிருப்தி வெளியிட்டார்.
குண்டு துளைக்காத வாகனம் தனக்கு அவசியம் இல்லை என்றும் கூறிய பேராயர், தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் போதுமானவையல்ல எனவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித், அரசாங்கத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றும் வீதியில் இறங்கிப் போராடவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன் அமைச்சர்கள் சிலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புள்ளதாகச் சந்தேகி்க்கப்பட்டால், ஏன் இதுவரை உரிய விசாரணை நடத்தப்படவில்லையெனவும் கேள்வி எழுப்பினார்.