மேலும் சில தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாமென வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல் ஒன்று கூறியுள்ளதால், அதன் காரணமாக ஞாயிறு ஆராதனைகளைத் தவிர்க்குமாறு பேராயர் கேட்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிப் பூஜைகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைகளுக்குச் செல்ல வேண்டாமென பேராயர் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்பதியடைந்துள்ள பேராயர் கர்தினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய குண்டு துளைக்காத வாகனத்தையும் ஏற்க மறுத்திருந்தார்.
தங்கள் பாதுகாப்பை விட, மக்கள் பாதுகாப்பே முக்கியமானதெனவும் பேராயர் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருந்தார். உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் பேராயர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்குச் செல்ல வேண்டாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிக்கலாமென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
குருநாகல் குளியாப்பிட்டியில் உள்ள பள்ளிவாசல் மீது புதன்கிழமை இரவு சில நபர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளதாகவும் அதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும் குளியாப்பிட்டி பொலிஸார் கூறியிருந்தனர்.