மத அறிஞர்களின் அரசியல் தலைமை வேண்டாம் என்ற தலைப்பில் பசீர் சேகுதாவூத் முஸ்லிம் சமூகத்துக்குக் கூறியுள்ள அறிவுரைகள் வருமாறு-
தலைவர் அஷ்ரஃப் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட பின்னர் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் செயலிழந்து இஸ்லாமிய மத அறிஞர்களின் கை, ஓங்கத் தொடங்கியது. இந்த நிலமையே 18 வருடங்களில் இலங்கை முஸ்லிம்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
தனி முஸ்லிம் அடையாளம் என்பது இனி வரும் பத்தாண்டுகளில் பேராபத்தை விளைவிக்கும் என்றெண்ணிய அஷ்ரஃப் தேசிய ஐக்கிய முன்னணியை (NUA) ஆரம்பித்து இதற்குள் அந்த தனி அடையாளத்தைப் புதைத்து சமூகத்தின் பாதுகாப்பை பேண முயன்றார்.
ஆயினும், சஹ்ரானின் தற்கொலைக் குண்டு வெடிப்புக்கு முந்திய வீடியோவின் இறுதியில் தொனிக்கும், "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" எனும் முழக்கம் இலங்கை அரசியலில் அஷ்ரஃப் தந்ததே ஆகும். இதற்கான அஷ்ரஃபின் பிராயச்சித்தம் நுஆ உருவாக்கம் என்று நம்பவேண்டியுள்ளது.
தற்போது, முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தை இஸ்லாமிய ஜனநாயக மதத் தலைமை முழுமையாகக் கைப்பற்றிவிட்டது. ஜனநாயகமாயினும் அது மதமே என்பதனால்; இனி இது முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் அமைதியான வாழ்வுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
நாகரிகங்களின் மோதல் நாகரிகமற்று நடக்கையில், இலங்கை முஸ்லிம்கள் இயக்கக் களைவை உடனடியாகச் செய்யவேண்டும். இயக்கங்களைக் களைந்தால் இலங்கை முஸ்லிம்களாக வாழலாம்; இல்லாவிட்டால் இயக்க முஸ்லிம்களாய் மாளலாம். ஆனால் மாண்ட பின்பு சொர்க்கம் செல்ல எந்த உத்தரவாதமுமில்லை.
பல்லின, பல்மத நாடொன்றில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களைப் பார்த்து "உம்மைப் போல் நாமில்லை" என்ற அரசியல், சமூக, மத தனியடையாளத்தை நிறுவ முயன்று தனிமைப்படுவது ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்கொலைக்கு தள்ளும் முயற்சியாகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.