பன்னிரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாகனங்கள், இரண்டு கெப் ரக வாகனங்கள், ஓட்டோ ஒன்று, டீமோ பட்டா லொறி ஒன்று மற்றும் இரண்டு கார்களில் வெடிபொருட்கள் ஆயுதங்கள் வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கைப் படையினர் அறிவித்துள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு நாட்களில் கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்களையும் கண்டுபிடித்து அழித்த இலங்கை முப்படையினருக்கு, வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த இருபது வாகனங்களையும் ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழாமலில்லை.
சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிற்கு செல்லும் வழியில் பல சோதனைச் சாவடிகள் இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்தச் சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்பட்டிருக்கும்? அல்லது 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதா?
இது தொடர்பாக இலங்கைப் படையினர் சரியான விபரங்களை வெளியிடாமல் வெறுமனே இருபது வாகனங்களில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறி அந்த வாகனங்களின் இலக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.
ஏதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்நதல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைப் படையினர் இவ்வாறு தகவல்கள் வெளியிடுகின்றனரா? அல்லது உண்மையிலேயே வெடிபொருட்கள், ஆயுதங்கள் வடபதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகச் சந்தேகங்கள் எழாமில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை முப்படையினர் வடபகுதியில் 24 மணி நேரமும் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த வாகனங்களைக் கடத்திச் சென்றவர்கள் அதனை அங்கு எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு நாட்களில் கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களையும் கண்டு பிடித்து அழித்த இலங்கை முப்படையினருக்கு, வடபகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த இருபது வாகனங்களையும் ஏன் கண்டு பிடிக்க முடியாமல் போனது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
கொழும்பு நகருக்குள் குண்டுகளுடன் கொண்டு வரப்பட்ட ஏழு வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆனால், இன்று வெள்ளிகிழமை வரையும் யாழ்ப்பாணத்தில் கடுமையான சோதனை தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் அந்த இருபது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களில் ஒன்றைத்தானும் இதுவரை படையினர் கண்டு பிடிக்கவில்லையே என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
மாறாக பிரபாகரனின் படம் இருந்ததாகக் கூறப்பட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இருபது வாகனங்களில் வடபகுதிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு, நேற்று வியாழக்கிழமை முதல் வவுனியாவில் நிரந்தரமாக இராணுவ வீதித் தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகவே ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்துக்கொண்டு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க அல்லது குழப்ப இலங்கை அரசாங்கம் முற்படுகின்றதோ அல்லது உண்மையிலேயே மக்களின் பாதுகாப்புக் கருதி இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.