இதனால், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் ஆதரவுடன் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கட்டடம், செட்டிகுளம் மெனிக்பாம், பத்தினியார் மகிழங்குளம் பிரதேசங்களிலுள்ள அரச கட்டடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், வவுனியாவில் அவர்களைக் குடியேற்ற வேண்டாமெனவும் அது மேலும் பல இன வேறுபாடுகளை உருவாக்குமெனவும் குறிப்பிட்டு , நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
எனினும் ஆளுநர் சுரேன் ராகவன், சுமந்திரன் ஆகியோர் அந்த அகதிகளை வவுனியாவில் குடியமர்த்த அனுமதித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அரச கட்டங்களில் குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் கேட்டுள்ளார்.
எனினும் அவர்களை வவுனியாவில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு மாதமும் தலா இருபதாயிரம் ருபாய் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.