ஸஹ்ரான் ஹாசீம் உயிரோடு இருப்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் ஸஹ்ரான் ஹாசீம் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலுக்குச் சென்றிருந்தார்.
ஆனால், ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைதாரியாகச் செயற்பட்டு குண்டை வெடிக்க வைக்கவில்லை. மாறாக குண்டை பொருத்திவிட்டு தப்பித்துச் சென்றிருக்க வேண்டும்.
அல்லது நேரக்கணிப்பு குண்டைப் பொருத்தி வெடிக்கவைத்திருக்கலாம், அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டை வெடிக்கச் செய்து விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாமென இலங்கைப் புலனாய்வுத்துறை பல வகையான சந்தேகங்களை தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளது.
குண்டுவெடிப்பில் சிதறிய உடல் பாகங்களுடன் செய்யப்பட்ட மரபணுப் பரிசோதனையில் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்படவில்லை.
அத்துடன் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படத்துக்கும், ஸஹ்ரான் ஹாசீமின் படத்துக்கும் இடையே வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
இதனால் மீண்டும் வேறு உடல் பாகங்களுடன் மரபணுப் பரிசோதனை ஒன்றைச் செய்யவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறை கூறுகின்றது
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பை ஸ்தாபித்த ஸஹ்ரான் ஹாசீம் ஐ.எஸ். இஸ்லாமியவாதிகளின் ஆதரவுடன் தலைமறைவாகச் செயற்பட்டு வேறு தாக்குதல்களை இலங்கையில் நடத்தக் கூடுமெனவும் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.