வன்முறை இடம்பெற்ற பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கைப் படையினர் முன்னிலையிலேயே முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தீயிடப்பட்டன.
அடிதடியினால் சிலர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்கள அரசியல் பிரமுகர்கள் சிலர் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். ஆனாலும் சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளை சுற்றிவளைத்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
வன்முறையில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களோடு வாய்த்தர்க்கம் புரிந்த முஸ்லிம்களை வீடுகளுக்குச் செல்லுமாறு இலங்கைப் படையினர் உத்தரவிட்டனர்.
ஆனால், சிங்கள இளைஞர்கள் வீதியில் நின்று முஸ்லிம்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இலங்கைப் படையினர் அதனைத் தடுக்கவில்லையெனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பிந்திக்கிடைத்த தகவலின்படி, முஸ்லிம் பிரதேசமான பலகத்துறைக்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் வழி மறிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் படையினர் சிங்கள இளைஞர்கள் எவரையும் கைது செய்யவில்லையெனவும் கூறப்படுகின்றது.