உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து
நீர்கொழும்பில் வன்முறை - சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்
மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவும் ஏற்பாடு
பதிப்பு: 2019 மே 06 08:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு:
மே 07 21:04
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு நகரின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறைகளையடுத்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக சமூக வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். வேறு வழிகள் மூலமாகவும் இனவாத மதவாதக் கருத்துக்களைப் பகிர்வோர் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைவாக, அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ் அடுத்தவாரம் தடை விதிக்கப்படுமென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜம்மியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய இரண்டு அமைப்புகள், கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டன.
அதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து, தடையை நிரந்தரமாக்க அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.