மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமையே ஆரம்பமாகுமெனவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, நீர்கொழும்பு பலகத்துறை கொச்சிக்கடை, போரதொட பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
இது இன வன்முறையல்ல எனவும் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்பட்ட தாக்குதலென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் பல வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டதுடன் தீயிட்டும் எரிக்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர், குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது. தற்போது நீர்கொழும்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.