இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தொலைவில் சிலாபம் நகரம் அமைந்துள்ளது.
இதேவேளை, ஸஹ்ரான் தலைமையிலான இஸ்லாமியவாதக்குழு உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தாக்குதலுக்கு முன்னர் தற்கொலைதாரிகள் ஒன்றாகச் சேர்ந்து செய்து கொண்ட உறுதிமொழி தொடர்பான காணொளியை, ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தலைமைக்கு அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தளைப் பிரதேசத்தில் வைத்து கடந்த எட்டாம் திகதி சந்தேக நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கைதான நபர் கட்டார் நாட்டில் இருந்து கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். ஏப்ரல் 19 ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்குச் சென்றிருந்தார்.
தற்கொலைதாரிகள் செய்துகொண்ட உறுதிமொழி அடங்கிய காணொளியை இந்த நபர் அனுப்பிய பின்னரே, ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தலைமை, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமை கோரியதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.