இலங்கையின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இந்தக் கப்பல் மிக விரைவில் இலங்கைக் கடற்பிரதேசத்தில் தனது பணியை ஆரம்பிக்குமென இலங்கைக் கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலைக் கையாள்வதற்கான பயிற்சிகள் அமெரிக்காவில் வழங்கப்பட்ட காலப்பகுதியில் இந்தக் கப்பலும் அங்கு மறுசீரமைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கப்பலைக் கையாள்வதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளை முடித்துக் கொண்டு இந்தக் கப்பலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்த இலங்கைக் கடற்படை அதிகாரிகள், இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உள்ளிட்ட கடற்படை உயர் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினர்.
அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கைக் கடற்படை வரலாற்றில் முதலாவது பெரிய போர்க் கப்பல் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
115 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளையும் பாரிய ஆயுதங்களையும் கொண்டமைந்துள்ளது.
இலங்கையில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் அரசியல், பொருளாதார நகர்வுகளுக்கு எதிராகவே ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் இராணுவ ரீதியான உறவுகளையும் அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கமாகப் பேணி வருகின்றது.
மறுபுறத்தில் சீன அரசுடன் அரசியல், பொருளாதார உறவுகளை இலங்கை அரசாங்கம் மேலும் வலுப்படுத்தியும் வருகின்றது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், இலங்கைப் படையினருக்குத் தேவையான நவீன ரக வாகனங்களை சீனா முதற் தடவையாக வழங்கியுள்ளது.