இதுவரை ஐந்து ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட ஒன்பது பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் பலவற்றுக்கு தீயிடப்பட்டுள்ளதாகச் சுயாதீனத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் புத்தளம் சிலாபம் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹெட்டிப்பொல, அனுக்கான் கிராமத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பல தீயிடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
மில்லேகொட, கலப்பிட்டியகம ஆகிய பிரதேசங்களிலும் நான்கு பள்ளிவாசல்கள், வீடுகள் அடித்து நொருக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளன.
இதனால் அந்தக் கிராமங்களில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வயல் வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். வேறு சிலர் கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றிரவு ஒன்பது மணியில் இருந்து நாளை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவங்களை உடனடியாக நிறுத்துமாறு ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சா்கள் கேட்டுக் கொண்டபோதும் ரணில் விக்கிரமசிங்கவோ, அமைச்சர்களோ எவரும் வாய்திறக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குற்றம் சுமத்தியுள்ளார்.