வடக்கு மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019 ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுரமீற்றர் பரப்பளவில் (802,206) இருந்து பதினெட்டாயிரத்து எண்பத்து இரண்டு (18,082) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையின் மத்தியிலும் முகமாலை பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்னிவெடிகள் மீட்கப்பட்டு குறித்த பகுதிகள் மக்கள் குடியேறுவதற்கு உகந்தவை என விடுவிக்கப்பட்டு மக்கள் தமது காணிகளில் மீளக்குடியேறிய பின்னர், அப்பகுதிகளிலிருந்து வெடிக்காத நிலையில் கண்னிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த வெடிபொருட்கள் வெடித்ததால் மக்கள் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சம்பவங்கள் வடபகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.