மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திங்கட்கிழமை சீனாவுக்குச் சென்றிருந்தார். இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த நூறு ஜீப் ரக வாகனங்களையும் வேறு உதவிகளையும் வழங்க சீன ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
சீன, இலங்கைப் புலனாய்வுத் துறையினருக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளுதல், இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விடயங்களில் சீன - இலங்கைக் கடற்படையினரும் முப்படையினரும் இணைந்த வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது போன்றவை தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டது.
அத்துடன் சமூகவலைத் தளங்களைக் கட்டுப்படுத்தல் அவதானித்தல் போன்றவற்றுக்கான தகவல் தொழில் நுட்பப் பயிற்சிகள், உதவிகள் பற்றியும், சீனத் தொழில்நுட்பக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இராணுவரீதியான ஒத்துழைப்புகளுடன் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விடயங்களை முன்னெடுப்பதற்கும் முழுமையான இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஏற்பட்டுள்ள இணக்கங்களின் பின்னர் சீன, இலங்கை இராணுவ ஒத்துழைப்புக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பையடுத்து நாளை மறுதினம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக் குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாகவே அமெரிக்காவும் இலங்கையில் கரிசனை செலுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் 16 ஆம் திகதி அமெரிக்காவின் வோஷிங்டன் டிசி (Washington, DC,) நகரில் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், சீனா இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.