இன்று புதன்கிழமை காலை 9.30 அளவில் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுதிரண்ட மாணவர்கள் சக மாணவர்களது விடுதலையை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.
மாணவர்கள் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், சட்டமா அதிபர் மூவரதும் விடுதலை தொடர்பாக உரிய அறிவித்தலை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியதாக யாழ்ப்பாண செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில், மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மருத்துவபீட மாணவனான ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் புகைப்படம் சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட குற்றச்சாட்டில் சிற்றுண்டிச்சாலை ஊழியரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.