பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்

கைதுசெய்யப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

சட்டமா அதிபர் உரிய அறிவித்தலை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்
பதிப்பு: 2019 மே 15 11:25
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 16 03:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Universitystudents
#Protest
#UOJ
#PTA
#lka
#Easterattacklka
#Universityofjaffna
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துபீட சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஆகிய மூவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
 
இன்று புதன்கிழமை காலை 9.30 அளவில் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுதிரண்ட மாணவர்கள் சக மாணவர்களது விடுதலையை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்கள் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், சட்டமா அதிபர் மூவரதும் விடுதலை தொடர்பாக உரிய அறிவித்தலை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியதாக யாழ்ப்பாண செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில், மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மருத்துவபீட மாணவனான ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் புகைப்படம் சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட குற்றச்சாட்டில் சிற்றுண்டிச்சாலை ஊழியரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.