இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அமெரிக்காவும் தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அமைச்சர் திலக் மாரப்பனவிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இலங்கையில் இடம்பெற்ற விசாரணைக்கு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அமைச்சர் திலக் மாரப்பன நன்றி தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு சீனா உதவி வழங்கவுள்ளமை தொடர்பாகவும் இலங்கை இராணுவத்திற்கு சீன இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் செய்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கேட்டு அறிந்து கொண்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வந்த சீனா, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், இலங்கை இராணுவத்திற்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கியுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோiவ சந்தித்த பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் இவ்வாறு கூறியுள்ளார்.