கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டமைக்கு அங்குள்ள சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இந்த அகதிகள் வடமாகாணத்தில் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அகதிகளை தற்காலிகமாகக்கூட வடமாகாணத்தில் குடியேற்ற வேண்டாமென்று தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஏற்கனவே இனமுறுகல் ஏற்பட்டுள்ள வடமாகாணத்தில் இந்த அகதிகளையும் குடியேற்றினால் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த அகதிகளை இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் பகிர்ந்தளித்து குடியேற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியிருந்தார்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் பாரம்பரியக் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கடந்த பல வருடங்களாக வாழ இடமின்றி ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்கள் இன்றுவரை அந்தரிக்கின்றன.
அத்துடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நாட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்கள் வதைபடுகின்றனர். இவர்களை வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்காத ஐக்கிய நாடுகள் சபை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற ஏற்பாடு செய்துள்ளமை தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.