தமிழர் தாயகம்

யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதி - 52 குடும்பங்கள் சிறுவர்களை தலைமைத்துவமாக கொண்டுள்ளன

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்
பதிப்பு: 2019 மே 26 12:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 27 20:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#TamilGenocide
#Lastwar2009
#Resettlement
#Warwidows
#Slgovernment
#lka
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருந்தது. முப்பது ஆண்டுகால போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இன அழிப்புத் தீவிரமடைந்தது. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரம் பேர் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 30 ஆண்டு போர்க்காலம் முதல் இன்று வரை ஈழத்தமிழ் மக்கள் உடைமைகள், சொந்த வீடுகள், நிலங்கள், சொத்துக்கள், என அனைத்தையும் இழந்து நிராதரவான நிலையிலேயே வசிக்கின்றனர்.
 
இதனடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் சொந்த வீடின்றி நிர்க்கதியாகியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூர்மை செய்தித்தளம் எழுப்பிய கேள்விக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து, குறிப்பாக இறுதிக்கட்ட இன அழிப்பு போர் இடம்பெற்ற வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்ததுடன் பின்னர், கட்டம் கட்டமாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இன்று வரை தங்களை தமது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு போராடிவருகின்றனர்.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2010 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 34 ஆயிரத்து 391 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 9 ஆயிரத்து 678 பேர் மீள குடியேறியுள்ளதாக மாவட்ட செயலகத்தின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மீள்குடியேறியவர்களில், 2009 - 2018 வரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 508 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு 2018 ஆம் ஆண்டு வீடமைப்புத் திட்டத்தின் பொருட்டு எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2009 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசசார்பற்ற நிறுவனங்களால் நான்காயிரத்து 7 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மூவாயிரத்து 795 வீடுகளும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக ஆறாயிரத்து 266 வீடுகளும், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக ஐயாயிரத்து 440 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, 27 ஆயிரத்து 261 வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், இவற்றில் 52 சிறுவர் தலைமைத்துவ குடும்பங்கள், 233 போரினால் பெண் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள், மூவாயிரத்து 255 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், 911 மாற்றுவலுவுடையோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 417 புனர்வாழ்வளிக்கப்பட்டோரை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், 297 காணாமல் ஆக்கப்பட்டவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குடும்பங்கள், ஆயிரத்து 659 வயது முதிர்ந்த போரினால் வீடுகளை இழந்த குடும்பங்கள், 420 இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய குடும்பங்கள், இருபதாயிரத்து 17 போரினால் உள்ளுரில் இடம்பெயர்ந்து வறுமையில் வாழும் குடும்பங்கள் என வீடுகளின்றி நிர்க்கதியான நிலையில் வசிப்பதாகவும் இவர்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரின் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த நிலையில், ஆயிரத்து 640 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விக்கு மாவட்ட செலயகம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மேற்குறிப்பிட்ட தொகையான வீடுகள் தேவையாக உள்ள நிலையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாது மூடப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான வீடுகள் பற்றைகள் வளர்ந்து கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பாக அமைவதாகவும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், போரினால் பாதிக்கப்பட்டவர்களை உரிய வகையில் இனங்கண்டு அவர்களது தேவைகளை இனங்கண்டு வீடுகளை உரியவர்களுக்கு வழங்குவதை கிராமசேவகர்கள் பிரதேச செயலகம் உட்பட மாவட்ட செயலகமும் உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.