தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல்

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

ஊடகவியலாளர்கள் படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இதுவரை நீதியில்லை
பதிப்பு: 2019 ஜூன் 01 22:26
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 17:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#LibraryBurned
#EzanaduPaper
#lka
#Tamil
#Media
#Srilanka
#lka
தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.
 
பிராந்திய பத்திரிகைகள் தமிழர் பிரதேசங்களிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மாத்திரமே வெளிவந்தன. இதனால் தமிழ் மக்களினுடைய பாரம்பரியங்களும் கல்விச் செயற்பாடுகளும் முக்கியத்துவமடைந்தன.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஐந்நதில் ஆறு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இலங்கையில் ஒற்றையாட்சியை நிறுவி, 1978 ஆம் ஆண்டு இரண்டாம் ஆம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கியிருந்தது. அந்த யாப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட இந்த அரசியல் யாப்பை ஈழநாடு பத்திரிகை வன்மையாக கண்டித்திருந்தது.

அதுமாத்திரமன்றி அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்த அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவையும் அவரது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் ஈழநாடு பத்திரிகை விமர்சித்திருந்தது.

இந்தக் காரணங்களின் அடிப்படையிலேயே யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அன்றிரவு ஈழநாடு பத்திரிகை காரியாலயமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இதன்போது காரியாலயத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் அமரர் ஐயா சச்சிதானந்தம் ஈழநாடு பணிப்பாளர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் காயமடைந்தனர். ஏனைய ஊழியர்கள் தப்பியோடினர்.

நகரத்தின் மத்தியில் இருந்த யாழ்ப்பாணம் மாநகரசபைக் கட்டடத்திற்கும் தீயிடப்பட்டது. ஆகவே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர் தாயகமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த தீ வைப்பு சம்பவங்களைக் கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இந்த நடவடிக்கைகளால் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களையும் அவர்களின் போராட்டத்தையும் எவ்வாறு பயங்கரவாதமாகக் கூறமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.

30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டமும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் இந்தக் கேள்விக்குப் பதில் தரவேண்டியவர்கள் யார்? என்பது தான் தமிழ் மக்களினுடைய மனக் குமுறலாக உள்ளது.

வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் தேசம் அங்கீகரிகப்பட வேண்டும் என்பதையே முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் பிரகடணமாக வெளியிட்டிருந்தனர்.