சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்ற அறிவிப்பு-

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள்

பொது மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்காமல் கட்சிகளுடன் பேசியமை சரியான அணுகுமுறையா?
பதிப்பு: 2019 நவ. 08 22:28
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 11 23:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளோடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடியது. இறுதியில் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் முன்னணி தவிர்ந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தன. இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆவணம் சிங்கள ஆங்கில ஊடகங்களில் ஈழக் கோரிக்கையாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததையடுத்துத் தமிழ்க் கட்சிகளைச் சந்திக்காமலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த ஆவணத்தை ஏற்க முடியாதெனக் கூறிவிட்டனர்.
 
எனினும் பிரதான வேட்பாளர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் எதனையும் இந்த தமிழ்க் கட்சிகளும் முன்னெடுக்கவுமில்லை. மாணவர்களும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததாக இல்லை.

சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள், உள்ளிட்ட பலரோடும் பகிரங்கமாகக் கலந்துரையாடி பொது மக்கள் அபிப்பிராயங்களை உருவாக்கி அதன் பின்னர் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களைத் தடம்புரளாத கட்டுக்குள் கொண்டுவரக் கூடிய நிலை இருந்தும், மாணவர்கள் தவறியது ஏன் என்பதே பலருடைய கேள்வியாகவும்

இந்த நிலையில் வவுனியாவில் ஒன்று கூடி ஆராய்ந்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவு செய்திருந்தது. சுமார் ஏழு மணிநேரம் கலந்துரையாடி இந்த முடிவை அறிவிப்பதாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடனும் ஆராய்ந்த பின்னர் இறுதி முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். ஆனால் ஆவணத்தில் கையொப்பமிட்ட ஈபிஆா்எல்டிப், தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமது முடிவு குறித்துக் கலந்துரையாடுவதா இல்லையா என்பது பற்றி அவர் எதுவுமே கூறவில்லை.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகளை முதலில் கண்டித்திருந்த புளொட், ரெலோ ஆகிய இயக்கங்கள் பின்னர் சஜித் பிரேமதாசவுக்கே தமது ஆதரவு எனத் திடீரென அறிவித்துள்ளன. ஆக ஈபிஆர்எல்எப் மாத்திரமே பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க முடியாதென்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் தமிழரசுக் கட்சி ஆவணத்தைப் புறக்கணித்துச் செயற்பட்டுத் தம்மையும் மக்களையும் ஏமாற்றியுள்ளதாகவும் ஈபிஆர்எல்எப் கண்டன அறிக்கையில் கூறியிருந்தது.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி தமிழரசுக் கட்சியை மென்மையாகவே கண்டித்திருந்தது. அத்துடன் மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க முடியும் எனவும் கூறியிருந்தது. இந்த இடத்தில் சரி, பிழை என்ற விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே தமது நிலைப்பாட்டை இன்று வரை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறது.

பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தைத் தங்கள் அரசியல் தேவைக்காகவே தமிழரசுக் கட்சி பயன்படுத்துகின்றது. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்ற முறையிலான சிந்தனைப் போக்கு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் முன்னணி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தது.

இங்கே கேள்வி என்னவென்றால், ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவு எடுத்தபோது ஏன் உடனடியாகவும் பகிரங்கமாகவும் கண்டிக்கவில்லை என்பதுதான்.

வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்திருந்த மாணவர்கள், ஐந்து கட்சிகள் மீதும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் ஆவணத்தில் பிரதான கட்சியாகக் கையொப்பமிட்ட பின்னர், மாணவர்களுக்கோ அல்லது கையொப்பமிட்ட ஏனைய கட்சிகளுக்கோ அறிவிக்காமல் ஏழு மணித்தியாலங்கள் வரை வவுனியாவில் கலந்துரையாடி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென தமிழரசுக் கட்சி அறிவித்தமை ஏமாற்று நடவடிக்கை என்று தெரிந்தும், மாணவர்கள் ஏன் அமைதிகாத்தனர் என்பதில் பலருக்கும் சந்தேகமே.

தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய ரெலோ, புளொட், உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவென அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்ட பின்னரே மாணவர்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அந்தக் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்தத் தவறு தமிழரசுக் கட்சியினாலேயே ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தவறு தொடர்பாக மாணவர்கள் எந்த வார்த்தையும் உச்சரிக்கவேயில்லை

தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய ரெலோ, புளொட், உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவென அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்ட பின்னரே மாணவர்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அந்தக் கண்டத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

உண்மையில் இந்தத் தவறு தமிழரசுக் கட்சியினாலேயே ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தவறு தொடர்பாக மாணவர்கள் எந்த வார்த்தையும் உச்சரிக்கவேயி்ல்லை. ஆக ஏதோவொரு அரசியல் நிகழ்சியின் பின்னால் மாணவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் அல்லது செயற்பட வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செயற்ப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சி எடுத்திருந்த சிவில் சமூக அமைப்புகளும் தமிழரசுக் கட்சியின் இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கவில்லை.

அது மாணவர்களின் பொறுப்பு. தமக்குரியதல்ல என்று சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறே பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவும் கண்டனம் வெளியிடவில்லை. சிவில் சமூக அமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர் தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவிலும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும் தமிழரசுக் கட்சியைப் பகிரங்கமாகக் கண்டிக்கவேயில்லை.

ஆக ஐந்து கட்சிகளும் ஆவணத்தை மீறிச் செயற்பட்டுள்ளன என்று ஒற்றைச் சொல்லில் கூறித் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டதாகவே கூறியுள்ளனர். கூட்டமைப்பு தங்களை ஏமாற்றி விட்டதென்பதை மாணவர்கள் கவலையோடு கூறுகின்றனர் என்பது உண்மை.

எனினும் அந்தக் கவலையில் நியாயம் இருந்தாலும் மாணவர்களின் அணுகுமுறைகளில் ஏற்பட்ட தவறான செயற்பாடுகளே இதற்குக் காரணம் என்று கூறலாம். குறிப்பாக ஐந்து கட்சிகளையும் அழைத்துப் பேசவுள்ள விடயம் தொடர்பாக தங்களுக்குக் கற்பிக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள அல்லது ஏனைய மாணவக் குழுக்களோடு இவர்கள் கலந்துரையாடினார்களா? ஆலோசனை பெற்றார்களா? என்பது இங்கு பிரதான கேள்வியாகும்.

ஐந்து கட்சிகளையும் இணைத்து ஆவணத்தில் கையொப்பம் பெறுவதற்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பது குறித்துப் பொதுமக்கள் அபிப்பிராயத்தை மாணவர்கள் உருவாக்கியிருக்க வேண்டுமென விரிவுரையாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திடம் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்.

தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுப் பின்னர் அரசாங்கம் தங்களை ஏமாற்றியுள்ளது என்று கூறிக்கொண்டு வெளியே வந்து, அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பேசுவது வரலாறு

மாணவர்கள் அவ்வாறு பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்காமல் எடுத்த எடுப்பிலேயே தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி சில நாட்களுக்குள் பதின்மூன்று கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தைத் தயாரித்து அவர்களிடம் கையொப்பம் பெற்றதனால், மிக இலகுவான முறையில் இந்த ஆவணத்தை மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மாணவர்கள் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் பட்டறிவுகளை சரியாகப் புரிந்து செயற்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுப் பின்னர் அரசாங்கம் தங்களை ஏமாற்றியுள்ளது என்று கூறிக்கொண்டு வெளியே வந்து, அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பேசுவது வரலாறு.

இது தமிழரசுக் கட்சிக்குப் பழகிப்போன அரசியலும் கூட. 1970களில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தக் கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டதுடன் எவருடைய அரசியல் ஏவுதலுக்கும் பின்னால் நின்று செயற்பட்டதில்லை.

1977 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஒதுக்கிவிட்டுத் தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா உருவாக்கியதும் வரலாறு. அதற்கும் மாணவர்களின் அழுத்தங்கள் காரணம் என அன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.

இந்தியா வரும் இந்திய இராணுவம் வரும் என்றெல்லாம் முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். 1985 ஆம் ஆண்டு மாணவன் விஜிதரன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனபோது, அன்று பல இயக்கங்கள் இருந்தும் உரிமையோடு விடுதலைப் புலிகளிடமே கேள்வி எழுப்பித் தொடர் போராட்டங்களை நடத்தியவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராக அகிம்சை வழியில் போராடி முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவபீட மாணவன் ஒருவனைப் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலிகொடுத்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்.

கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுக் கல்வியைத் தொடர அவதிப்பட்டவர்கள்தான் பல்கலைக்கழக மாணவர்கள். இலங்கை இந்திய இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தமக்குரிய நியாயங்களையும் ஈழத் தமிழர் அரசியலையும் வெளிப்படுத்திய பெருமை யாழ், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உண்டு.

குறிப்பாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 17 ஆம் திகதி முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக மூத்த விரிவுரையாளர் கலாநிதி சிதரம்பரநாதனின் ஆலோசணையோடு 2000 ஆம் ஆண்டில் இருந்து கலந்துரையாடல்களை மாணவர்கள் நடத்தியிருந்தனர்.

பொங்கு தமிழ் நிகழ்வை நடத்த வேண்டும் என்ற நோக்கில் 2000 ஆம் ஆண்டு பொதுமக்கள் அபிப்பிராயங்களை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியவர்களே இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள். அவ்வளவு தற்துணிவும், அரசியல் அறிவும், தூரநோக்குச் சிந்தனையும் அப்போதைய மாணவர்களிடம் இருந்தது.

விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதனின் ஆலோசனையோடு 2000 ஆம் ஆண்டு கலந்துரையாடல்களை மாணவர்கள் நடத்தியிருந்தனர். 2000 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நிகழ்வை நடத்த வேண்டும் எனற நோக்கில் பொதுமக்கள் அபிப்பிராங்களை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியவர்களே இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள்

எனவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் ஜனநாயக ரீதியாக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தக் கூடிய நிலையில் அல்லது சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரோடும் பகிரங்கமாகக் கலந்துரையாடி பொது மக்கள் அபிப்பிராயங்களை உருவாக்கி அதன் பின்னர் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களைத் தடம்புரளாத கட்டுக்குள் கொண்டுவரக் கூடிய நிலை இருந்தும், மாணவர்கள் தவறியது ஏன் என்பதே பலருடைய கேள்வியாகவும் சிந்தனையாகவும் உள்ளது.

இவர்கள் மாணவர்கள்தானே இவர்களுக்கு நாங்கள் ஏன் பதில் கூற வேண்டும் என்ற சிந்தனையும் அசட்டுத் துணிவும் தற்போது தமிழ்க் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதையே இந்த ஆவணத்தைப் புறக்கணித்த செயற்பாடு கோடிகாட்டி நிற்கிறது. அத்துடன் மாணவர்கள் தமது சொந்தப் புத்தியோடும் தற் துணிவோடும் செயற்படாமல் வெளிச் சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்பட்டுள்ளனர் என்ற கருத்துக்களை மறுக்கவும் முடியாது.

அதேவேளை, தமிழ் மக்கள் சார்பில் சிவாஜிலிங்கம் சுயேற்சையாகப் போட்டியிடுகின்றார். குறைந்த பட்சம் அவரைப் பொதுவேட்பாளராகக் கருதி பதின்மூன்று கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை தேர்தல் விஞ்ஞாபனமாக்கி அவருடைய மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கலாம்.

ஆனால் அதைக் கூட இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கமும் எழாமலில்லை.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளராக அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். ஜே.வி.பித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா உள்ளிட்ட 35 பேர் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.