இந்த விரிவாக்கம் சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கத்தின் கட்டளைகளாக மாற்றமடையவுள்ளதாகச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள சுவரில் இலங்கைக்கு விஜயன் வந்த வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியங்களும் சங்கமித்தையின் உருவாகச் சிலையும் இரவோடு இரவாக வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இன்று சனிக்கிழமை காலை மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவுள்ளதை அறிந்து அந்த உருவாகச் சிலை அகற்றப்பட்டுள்ளது. ஆனால் வரையப்பட்ட ஓவியம் அப்படியே உள்ளது.
யாழ் சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே ஓவியம் வரையப்பட்டு சங்கமித்தையின் உருவாகச் சிலையும் வைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சம்பவ இடத்தில் நின்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே யாழ் மாநகர சபையும் சிறைச்சாலைச் சுவரில் சங்கிலிய மன்னனின் வரலாற்றைக் கூறும் ஓவியம் ஒன்றை வரைய வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி அமைந்துள்ளது. யாழ் நகரத்தின் முக்கிய பிரதேசமாகப் பண்ணைப் பகுதி விளங்குகின்றது. ஆகவே அவ்வாறான முக்கியமான இடம்மொன்றில் இவ்வாறான உருவச் சிலைகளை வைத்துப் பின்னர் அதனை விகாரையாக மாற்றுவதே திட்டமென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் சிலை நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டது. அந்தச் சிலை மூடித் துணியால் கட்டடப்பட்டிருந்தது. சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் சிலை வைக்கப்பட்ட இடத்தில் வரையப்பட்டுமுள்ளது.
சம்பவத்தை அறிந்து அந்த இடத்தில் இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் ஒன்று கூடினர். அவர்களின் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய சிலை அந்த இடத்திலிருந்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் வரையப்பட்ட ஓவியம் அப்படியே உள்ளது.
ஆகவே நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் சிந்தித்துத் தமது அரசியல் கருத்துக்களை பலமடையச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுத் திசை திருப்புவதாக சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனா்.
இவ்வாறான அத்துமீறல்கள் ஒவ்வொன்றுக்காகவும் போராட்டம் நடத்தி மக்கள் களைத்துவிட்டால், அவர்களிடம் இருக்கும் பிரதான அரசியல் மையக்கருத்தை நீக்கம் செய்துவிடலாமென்றே கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கமும் சிங்கள அரசியல்வாதிகளும் நம்புகின்றனா்.
போரின் பக்கவிளைவுகளான அரசியல் கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் மக்கள் தீர்வைத் தேடி அலையும் நிலையில், காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல், புத்தவிகாரை கட்டுதல், பௌத்த மரபுரிமைச் சின்னங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களை வரைதல் போன்ற புதிய புதிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துத் தாயகப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் போராட்ட மன நிலைக்குத் திட்டமிட்டுத் தள்ளுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கைகளும் முகாம்களும் குறைக்கப்படவேயில்லை. இவ்வாறான நிலையில் அங்கு மக்களை ஆத்திரமடையச் செய்யும் புதிய புதிய விவகாரங்களை உருவாக்கிப் பின்னர் அதனைச் சர்ச்சையாக்கித் தாயகப் பிரதேசங்களில் கொதி நிலை ஒன்றைத் தொடர்ச்சியாகப் பேணுவதையே சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.
இதனையே சமீபகாலச் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் போராட்டக் குணங்கள் வலிந்து உருவகப்படுத்தப்படுவதாகவே சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்துகின்றனர்.