ராஜபக்சவின் கட்சிக்குள் குழப்பங்கள்

இடம் மாறப்போகும் இனவாதம்

ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கதைசொல்லி மீண்டும் மூளையைக் கழுவத் தயாராகும் வல்லாதிக்க நாடுகள்
பதிப்பு: 2021 ஏப். 11 15:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 27 15:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஆட்சி மாற்றம் ஒன்றே இலங்கையில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமென்ற பொய்மைக்குள் 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் உட்படப் பலரும் விழுந்தனர். 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரச்சனைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளும் தீர்ந்து வடக்குக் கிழக்கு அடங்கலாக இலங்கைத் தீவு சுபீட்சமடையுமென்ற பிரச்சாரமும் அன்று செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகா பதவியேற்றுச் சில மாதங்களிலேயே மீண்டும் போர் மூண்டது.
 
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஏற்றவாறு சிங்களத் தேசிய கட்சிகளும் பௌத்த அமைப்புகளும் எவ்வாறு தம்மை நெறிப்படுத்துகின்றதோ, அதேபோன்று தமிழர்கள் ஒரு தேசமாக மீண்டெழுவதற்கான நகர்வுகளே உடனடித் தேவையாகவுள்ளது. மாறாகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் அரசியல் செயற்பாடுகள் அல்ல

அவ்வாறே 1999 ஆம் ஆண்டும் ஆட்சி மாற்றம் வரும் என்ற மற்றுமொரு பொய்யான நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மீண்டும் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய அரசாங்கம் பதவியேற்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததால் சந்திரிகா அரசாங்கம் தடுமாறியது. ஆதரவு கொடுத்த முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கட்சிக்குச் செல்ல, அரசாங்கம் பதவி கவிழ்ந்தது. இதனால் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

இங்குதான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் விரும்பிய ஆட்சி மலர்ந்தது. அதாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைத்தது. 1978 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை 17 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2001 ஆம் ஆண்டு புனிதப்படுத்தப்பட்டது.

1994 ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட 62 சதவீத வாக்குகளினால் அமோக வெற்றியடைந்த சந்திரிகாவின் அரசாங்கம் 2001 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. ஆனால் சந்திரிகா தொடர்ந்தும் ஜனாதிபதியாகவே பதவி வகித்திருந்தார். இந்தவொரு நிலையில், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டோடு ஆரம்பித்த சமாதானப் பேச்சுக்களில் சந்திரிகா ஜனாதிபதி என்ற முறையில் ஒப்பாசாரத்துக்காக ஆதரித்திருந்தார்.

இருந்தாலும் ரணில் தலைமையிலான அரசாங்கம் அதனை முன்னெடுப்பதால் அந்தச் சமாதானப் பேச்சுக்களின் முன்னேற்றங்கள் மற்றும் வடக்குக் கிழக்கில் செயற்படுத்தப்பட வேண்டிய உடனடி வேலைத்திட்டங்களுக்கு அவர் இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார். இதனை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் ஒரு சாக்குப்போக்கா எடுத்து தமிழர்களின் அரசியல்தீர்வு மற்றும் இயல்பு நிலைமைகளை உருவாக்கும் விடயத்திலும் இழுத்தடிப்புச் செய்தது.

இந்த இழுபறியின் உச்சமே 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று அமைச்சுக்களின் பொறுப்புகளை சந்திரிகா ரணில் அரசாங்கத்திடம் இருந்து பறித்தெடுத்தார்.

இதனால் அன்று கொழும்பில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு வழிசமைத்தது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய உள்ளிட்ட சிங்கள இனவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டுச் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தும் நோக்கில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனால் மேற்குலகம் விரும்பியிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் எதிர்க்கட்சியாக மாறியது. 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டார். அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சந்திரிகாவுடனான பெரும் இழுபறிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். (மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அப்போது சந்திரிகா விரும்பியிருக்கவில்லை)

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வேண்டுமென்பதில் அப்போது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. இந்தியாவும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக மகிந்த ராஜபக்ச மயிரிழையில் ஜனாதிபதியாகத் தெரிவானார்.

இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேலும் பலம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கரு ஜயசூரிய தலைமையில் 17 உறுப்பினர்கள் மகிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றனர்.

ஆட்சி மாற்றங்களின்போது இனவாதம் வெவ்வேறு வடிவங்களில் தேவைக்கு ஏற்ப இடம்மாறுவது மாத்திரமே இலங்கை அரசாங்க முறையில் காணமுடிகின்றது என்ற வரலாற்று உண்மைகளையும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பே கடந்த எழுபது ஆண்டுகால இன அழிப்புக்குக் காரணம் என்பதையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் நிறுவுவதற்கான உறுதியான செயல்த் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்

2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் ஆரம்பித்தவொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தனர். இதனால் பலம்பெற்ற மகிந்த அரசாங்கம் துணிவோடு போரை நடத்தியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பலவீனமானது. கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சனைகூட எழுந்தது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் போர்க்குற்றங்கள், இன அழிப்பு என்ற குற்றச்சாட்டுக்களைக் கடந்து. மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக அதிகாரத் துஸ்பிரயோகம், மனித உரிமைமீறல் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜே.வி.பி மற்றும் சில சிறிய சிங்களக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தன.

இதனால் போரை வெற்றிகரமாக நடத்தி முடித்தவரென அப்போது சிங்கள மக்கள் மத்தியில் புகழ்பாடப்பட்டு ஓய்வுபெற்றிருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு ஆதரவு வழங்கியமைதான் அன்று ஆச்சரியமாக இருந்தது. மேற்குலக நாடுகளும் இதனை மறைமுகமாக வரவேற்று ஆதரவு வழங்கியிருந்தன. ஆனால் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் நிகழவில்லை.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் பிளவுகள் எழுந்தன. இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரச்சனைகளைத் தீர்க்க உரிய தலைமை அவசியம் என்ற அடிப்படையிலேயே பிளவுகளும் ஏற்பட்டிருந்தன. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழச் சமூகத்துக்கு உடனடியாகத் தேவைப்படும் அடிப்படை உதவிகள் மற்றும் நிரந்த அரசியல்தீர்வு பற்றியதாக அந்தப் பிளவு இருக்கவேயில்லை.

ஆனாலும் 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சு நடைபெற்றபோது ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துக்குள் ஏற்படுத்திய பிளவுகள்தான் போரை வெற்றிகொள்ள இலகுவாக இருந்ததென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையைக் காப்பாற்ற வேறுசில உறுப்பினர்கள் முற்பட்டனர். இவ்வாறான இழுபறிகளுக்கு மத்தியில் மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்கு மேற்குலகம் தயாராகியது.

அதன் பெறுபேறுதான் மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியில் எடுத்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு விட்டுக்கொடுத்திருந்தார்.

அன்று மகிந்தவுக்கு ஆதரவு வழங்கிப் பின்னர் முரண்பட்ட இனவாதிகளான ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற கட்சிகளும் முரண்பாடுகளில் உடன்பாடாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தன. இதனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மூன்று மாதங்களில் மைத்திரி- ரணில் மோதல் ஆரம்பித்தது. அதனைப் பயன்படுத்திய ராஜபக்ச குடும்பம் 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஒன்றை ஆரம்பித்து 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 214 சபைகளைக் கைப்பறி மீண்டும் தங்கள் செல்வாக்கைக் காண்பித்தது.

அன்றில் இருந்து கோட்டாபாயவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்துக்கள் கசிய ஆரம்பித்தன. 2018 ஆம் ஆண்டு அந்தப் பிரச்சாரம் உச்சம் தொட்டது. இதன் பயனாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2020 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையோடு சிறிய கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன ஆட்சியமைத்தது.

ஆனால் ஓராண்டு நிறைவில் ராஜபக்ச அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. அத்தோடு தொடர்ச்சியாகப் பதவியை இழந்து வந்த ரணில் விக்கிரமசிங்க மீதும் அனுதாப அலையொன்று வீச ஆரம்பித்திருக்கிறது.

2002இல் ரணில் சமாதானப் பேச்சை ஆரம்பித்த அன்றைய நாளே ஈழப்போருக்கும் முடிவுகட்டப்பட்டது என்றதொரு உணர்வு இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியில் இல்லாமலில்லை.

ரணிலுக்கு ஆதரவான சிங்கள நாளேடுகளில் வெளிவரும் கட்டுரைகள் அதனைப் புடம்போட்டுக் காண்பிக்கின்றன. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றாத நிலையில் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்குக்கூட எவரும் தெரிவு செய்யப்படவில்லை.

இந்தவொரு சூழலில் தற்போது ரணில் விக்கிரமசிங்க மீது அதிஷ்டக் காற்று வீசுகின்றது. ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் சஜித் தலைமையிலான 54 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியாகச் செயற்பட்டாலும் அங்கு ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை போன்ற காரணிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சாதகமானதொரு நிலையைத் உருவாக்கியுள்ளதெனலாம்.

அத்துடன் ரணில் தனித்துச் சுதந்திரமாக ஆட்சியமைத்தால் தமக்கும் வசதியாக இருக்கும் என்றவொரு நோக்கம் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கும் உண்டு. எவ்வாறாயினும் தேர்தல் வெற்றிக்கு இனவாதமே பிரதான முதலீடாக இருக்க வேண்டும்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க நாடுகளும் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொண்டு கதை சொல்லி மீண்டும் மூளையைக் கழுவும். அதனைத் தமிழரசுக் கட்சியும் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளும் ஏற்றுக்கொண்டு பிரச்சாரங்களை ஆரம்பிக்கும்

அதனால்தான் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவை மையமாக் கொண்டு ஒரு அணியும் பசில் ராஜபக்சவை பிரதானப்படுத்தி மற்றுமொரு அணியும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளன.

இதனையே தனக்குச் சாதகமாக்கியுள்ளார் ரணில். ஈழத்தமிழர்களுக்கும் மேற்குலகத்துக்கும் நல்ல பிள்ளையாகவும் 2002 இல் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களே 2009 இல் போரை முடிவுறுத்தியதெனச் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லவும் ரணிலிடம் ஆதாரங்கள் உண்டு.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க நாடுகளும் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொண்டு கதை சொல்லி மீண்டும் மூளையைக் கழுவும். அதனைத் தமிழரசுக் கட்சியும் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளும் ஏற்றுக்கொண்டு பிரச்சாரங்களை ஆரம்பிக்கும்

ஆக ஆட்சி மாற்றங்களின்போது இனவாதம் வெவ்வேறு வடிவங்களில் தேவைக்கு ஏற்ப இடம்மாறுவது மாத்திரமே இலங்கை அரசாங்க முறையில் காணமுடிகின்றது என்ற வரலாற்று உண்மைகளையும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பே கடந்த எழுபது ஆண்டுகால இன அழிப்புக்குக் காரணம் என்பதையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் நிறுவுவதற்கான உறுதியான செயல்த் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஏற்றவாறு சிங்களத் தேசிய கட்சிகளும் சிங்களச் சிவில் சமூக மற்றும் பௌத்த அமைப்புகளும் எவ்வாறு தம்மை நெறிப்படுத்துகின்றதோ, அதேபோன்று தமிழர்கள் ஒரு தேசமாக மீண்டெழுவதற்கான நகர்வுகளே உடனடித் தேவையாகவுள்ளது.

மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்களில் போட்டியிடும் தேர்தல் அரசியல் செயற்பாடுகள் அல்ல.

குறிப்பாக 2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது போன்றவற்றுக்கான தயார்ப்படுத்தல்கள் எல்லாமே அவசியமற்றவை.