மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியில் இணைவது தொடர்பாகப் பேச்சு நடத்தி வரும் 16 உறுப்பினர்களும் சம்பந்தனை சந்தித்து உரையாடியதுடன், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது குறித்தும் சம்பந்தனுடன் மனம் விட்டு பேசியதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் 16 உறுப்பினர்களுடனும் சுமார் ஒன்றரை மணிநேரமாக இடம்பெற்ற சந்திப்பில், பேசப்பட்ட முழு விபரங்களையும் சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. 16 உறுப்பினர்கள் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டிலான் பெரேராவும் எதுவும் கூறவில்லை.
ஆனால், அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல், அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ரரஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியை விமர்சிக்காமல் இருப்பது தொடர்பாகவும், வேறு அரசியல் உறவகள் குறித்தும் பேசப்பட்டதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து 16 உறுப்பினர்களும் இன்னமும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
ஆனால், மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையுடன், சம்பந்தனுடனான சந்திப்பு இடம்பெற்றது என்றும் ஆட்சிமாற்றம் பற்றியே இருதரப்பும் பேசிக் கொண்டதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சம்பந்தனிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவது மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பது உள்ளிட்ட விடயங்களை வெளிப்படையாக பேசிய கூட்டு எதிர்க்கட்சியும் 16 உறுப்பினர்களும் தற்போது, தமது அணுகுமுறையை மாற்றியுள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூர்மை செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளன.
கூட்டு எதிர்க்கட்சியில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே 16 உறுப்பினர்களும் இணைந்தால் 70 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பர்.
அவ்வாறானதொரு நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயர் கரு ஜெயசூரியவிடம் எழுத்து மூலம் அறிவித்த கூட்டு எதிர்க்கட்சி, இன்று சம்பந்தனுடன் இணைந்து செயற்பட எத்தனிப்பதன் நோக்கம் என்ன என்பது தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
மஹிந்தவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்ற அடிப்படையில் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவிப்பு இந்திய மத்திய அரசினால் சம்பந்தனுக்கு விடுக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் தற்போது மஹிந்த ராஜபக்ச்வின் கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் செல்வாக்குகளை அறிந்து தமது நல்ன்சார்ந்த விடயங்களில் பேச்சு நடத்தி வருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசியல் அணி, இலங்கையில் ஆட்சியமைக்க நேரிட்டால், புவிசார் அரசியலில். தமது தேவைப்பாடுகள் குறித்த விடயங்களில் மஹிந்த ராஜபக்சவுடன் இணப்பாட்டை ஏற்படுத்துவது பற்றிய கலந்துரையாட்ல்கள் கூட இடம்பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன் புலத்தில் இருந்துதூன், 16 உறுப்பினர்கள் மூலமாக சம்பந்தனுடனான முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் செல்வாக்குகள் மற்றும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு. கொழும்பில் உள்ள சீனத் தூதுவரும் பேச்சு நடத்தி வருகின்றார்.
அம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்குச் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்ற சீனத் தூதுவர், சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடியதாக, கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆகவே, இலங்கையில் அடுத்த யார் ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, தமது அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டு வரும் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் இராஜதந்திர அணுகுமுறையை அறிந்து கொண்டு, தமிழர்களின் விவகாரங்களில் பேரம்பேசாமல், தமக்குரிய சலுகைகளை மாத்திரம், தமிழரசுக் கட்சி பெற்றுக்கொள்வதாக அவதானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, கொழும்புக்கு வருகை தந்துள்ள, அமெரிக்க காங்கிரஸ் குழு புதன்கிழமை சம்பந்தனை சந்தித்து உரையாடியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு விரும்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இனப்பிர்ச்சினை தீர்வின் அவசியத்தை அமரிக்க காங்கிரஸ் குழு இலங்கை அரசுக்கு வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவே அமரிக்க காங்கிரஸ் குழு இலங்கைக்கு வந்ததாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் மட்ட தகவல்கள் கூறுகின்றன.