முல்லைத்தீவில் இருந்து மட்டுநகர் வரையான கிழக்குக் கடலில் பெற்றோலிய ஆய்வு தொடர்பான புதிய ஒப்பந்தம்

ஈழத்தமிழரின் கிழக்குக் கடலை அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கிறதா இலங்கை ஒற்றையாட்சி அரசு?

கிழக்குக் கரையின் சிங்கள மயமாக்கலுக்குச் சர்வேதச அங்கீகாரமா எனத் தமிழ் அவதானிகள் கேள்வி
பதிப்பு: 2018 மே 31 22:01
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 01 02:05
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் இணைபிரியா அங்கமான திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள Schlumberger என்ற அமெரிக்க நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது. இதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கை ஒன்றை சுலும்பேர்கர் நிறுவனம் இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்கவுடன் புதன்கிழமை (மே 30) கைச்சாத்திட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூர்மை செய்தித்தளத்திற்குக் கருத்துவெளியிட்ட தமிழ் பேசும் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் சுட்டிக்காட்டினார்.
 
கிழக்குக் கடல் தொடர்பாக கொழும்பு அரசு அமெரிக்க நிறுவனத்துடன் உடன்படிக்கை
இலங்கை அரச அமைச்சின் தரவுகைளக் கொண்டு சண்டே ரைம்ஸ் என்ற கொழும்புப் பத்திரிகையால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபடத்தில் J5 மற்றும் J6 என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்குரிய ஒப்பந்தமே அமெரிக்க நிறுவனத்துடன் தற்போது கைச்சாத்திகியுள்ளது. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு வரையான கிழக்குக் கடல் என்பதை அவதானிக்க.
கிழக்குக் கடல் பிரதேசம் மாத்திரமல்ல ஏனயை கடற் பிரதேசங்களிலும் இந்த ஆய்வு இடம்பெறும் என்று இலங்கை அரசு கூறினாலும் இந்தத் திட்டம் முல்லைத்தீவில் இருந்து மட்டக்களப்பு வரை திருமலையை மையப்படுத்திய கிழக்குக் கடல் முழுவதையும் தனது இலக்காகக் கொண்டுள்ளதாக தனது பெயரைப் பகிரங்கமாகக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது முற்றுமுழுதாக அமெரிக்காவின் இராணுவ கேந்திர நலன்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு நகர்வே என்றார் அவர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டு அபிவிருத்திச் சபை, மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் குறித்த அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கடந்த சில வாரங்களாக கலந்துரையாடிவந்ததன் தொடர்ச்சியாகேவ இந்த உடன்படிக்கை கைச்சாத்தானதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலும், இலங்கையில் ஏற்படக்கூடிய அரச மாற்றங்களுக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்க அரசியல், இராணுவத் தரப்புகளில் இருந்து அண்மைக்காலமாக அதிகரித்திருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கிழக்குக் கடலின் J5, J6 என்று அடையாளப்படுத்தப்படும் பகுதிகளுக்கான ஒப்பந்தமே இது என்ற தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனம் மத்தியகிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.

இந்த நிறுவனமே தமிழர் தாயக பிரதேசமான கிழக்கில் வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்கிய கிழக்குக் கடலில் பல இடங்களில் எண்ணை மற்றும் ஏனைய எரிவாயு தொடர்பான ஆய்வுகளை நடத்தவுள்ளது.

இந்த ஆய்வுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

இரண்டாம் உலகயுத்த காலத்தின்போது திருகோணமலையைத் தனது தளமாகக் கொண்டு பிரித்தானிய காலனித்துவ அரசு இயங்கியதும், தொடர்ந்தும் திருமலையை விமானத்தளமாகப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையை டி.எஸ் சேனநாயக்காவுடன் ஏற்படுத்திக் கொண்டதும் வரலாறு
இலங்கை அரசின் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முக்கியமான அபிவிருத்தி திட்டமாக இந்த ஆய்வு நடவடிக்கை அறிவிக்கப்படும் எனவும் இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வள ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியாக, Total என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தது. ஆனாலும் பல்வேறு வெளிச்சக்திகளின் அழுத்தங்களினால் அந்த உடன்படிக்கை கைவிடப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கு முந்திய அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான கேந்திர நிலையங்களைத் தம்வசப்படுத்தும் நோக்கில் இந்திய அரசும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் பேச்சுக்கைள நடத்தியிருந்தது. சீன அரசும் ஏட்டிக்குப் போட்டியாக இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டது.

தமிழர் தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்கள் தமது இறைமையுடன் கூடிய சுயநிர்யண உரிமையை வலியுறுத்தி வரும் நிலையில், கிழக்குப் பிரதேசத்தை வெளிச் சக்திகளின் ஆளுகைக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் ஜே.ஆர் ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆனாலும், தொடர்ந்து வந்த போர்க்கால சூழல் அதற்கு இடமளிக்கவில்லை.

இரண்டாம் உலகயுத்தகாலத்தின்போது திருகோணமலையைத் தனது தளமாகக் கொண்டு பிரித்தானிய காலனித்துவ அரசு இயங்கியதும், தொடர்ந்தும் திருமலையை விமானத்தளமாகப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையை டி.எஸ் சேனநாயக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டதும் வரலாறு.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரின் பின்னர் கிழக்கு பிரதேசத்தை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றி, தமிழர்களின் தாயகப் பிரதேசத்தைக் கூறுபோட இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்ச்சியாக முயன்று வருகிறது
இந்தப் பேரம்பேசலின் போது தமிழரின் அரசியற்கோரிக்கைகளைப் பிரித்தானியா புறந்தள்ளியது. விளைவாக திருமலையில் அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் பலப்பட்டன.

இதே பாணியிலேயே ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப் போரின் போதும் அதன் தொடர்ச்சியாகவும் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவும் செயற்பட்டுவந்துள்ளன.

தற்போது முல்லைத்தீவும் மட்டக்களப்பும் இந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு இன அழிப்பை எதிர்நோக்கவுள்ளன என்று திருகோணமலை வாழ் தமிழ் அவதானிகள் கூர்மை செய்தித்தளத்திற்குச் சுட்டிக்காட்டினர்.

இந்திய முனைப்பால் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையும் வடக்கு கிழக்கு வாழ் ஈழத்தமிழர்களின் இறைமை, சுயநிர்ணயம் குறித்த அங்கீகாரமற்ற ஒன்றாக ஒற்றையாட்சிக்கு முண்டுகொடுப்பதாகவே வெளிப்பட்டது.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரின் பின்னர் கிழக்கு பிரதேசத்தை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றி, தமிழர்களின் தாயக பிரதேசத்தைக் கூறுபோட இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்ச்சியாக முயன்றுவந்திருக்கிறது.

மேற்குலகின் போட்டிக்களமாக கிழக்குப் பிரதேசத்தை இலங்கை அரசு கையாள்வதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண செய்தியாளர் மாநாடுகளில் கூறி வருகின்றார்.

2000 ஆம் ஆண்டுகளில், திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் இல்மனைற் கனியவளத்தை அகழ்ந்து எடுப்பதற்கான அனுமதியை ஜப்பான் நாட்டிற்கு இலங்கை அரசு வழங்கியபோதும் விக்கிரமபாகு கருணாரட்ண இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஈழத்தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து சிங்களமயமாக்கலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தமிழர்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையையயும் முஸ்லிம்களுக்குள் தமிழர் விரோத மனநிலையையும் சில சக்திகள் திட்டமிட்டு ஏற்படுத்திவருகின்றன
தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து 55 கி.மீ தூரத்தில், நிலாவெளிப் பாதையின் எல்லையிலும், அனுராதபுரத்தில் இருந்து 105 கி.மீ தொலைவிலும் புல்மோட்டை அமைந்துள்ளது.

புல்மோட்டைவாழ் தமிழ்பேசும் முஸ்லிம்களும் கடும்போக்கு பௌத்த சிங்கள ஊடுருவலைப் பலமுனைகளிலும் எதிர்கொள்கிறார்கள்.

புல்மோட்டைக்கு வடக்கே, நாயாறு-கொக்கிளாய்-முகத்துவாரம் உள்ளடங்கிய வடமாகாணத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசம் அண்மைக்காலமாகக் கடுமையான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதும் இங்கு அவதானிக்கப்படவேண்டும்.

அதேவேளை ஈழத்தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து சிங்களமயமாக்கலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தமிழர்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையையயும் முஸ்லிம்களுக்குள் தமிழர் விரோத மனநிலையையும் சில சக்திகள் நன்கு திட்டமிட்டு ஏற்படுத்திவருகின்றன. இதற்கு இரண்டு தரப்பினரும் எடுபடுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதும் இத்தருணத்தில் ஆழமாக நோக்கப்படவேண்டும்.