ஆனால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவே என்று கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.
கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இல்லையென்றும் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இணைந்து கொள்ளலாம் எனவும் தயாசிறி ஜயசேகர இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச அல்ல, எந்த கொம்பன் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெற்றி பெறுவாரென இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க இன்று சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆகவே ஏட்டிக்குப் போட்டியாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவில் மைத்திரி மகிந்த அணி மோதுவதாகக் கூறிய கொழும்பு அரசியல் வட்டாரங்கள், இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான மூன்று வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்குவா் என்றும் கூறியுள்ளன.
மைத்திரி, மகிந்த மோதலினால் ஒரே கொள்கையுடைய கட்சிகள் இரண்டு வேட்பாளர்களை களமிறக்கும் போது, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி அதிகமாக சாத்தியப்படலாம் என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.பி.விஜயதுங்க ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளா் சந்திரிகா 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஏறத்தாள 17 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியது.
அன்றில் இருந்து இன்று வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
ஆனாலும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி போன்றே செயற்பட்டு வருகின்றாார்.
உதாரணமாக கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஸ்ரீ்லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி என்றே அவர் தன்னை அடையாளப்படுத்திவிட்டார்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளா் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்கும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு.
ஆகவே 25 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக் கதிரையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமரப் போகின்றார் என்பது உறுதியாகிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது தற்போது சபாநாயகராக பதவி வகிக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படலாம் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தமக்கு நெருக்கமான செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவப் போகின்றது. 51 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே மூன்று பிரதான வேட்பாளர்களும் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் நான்கு அல்லது ஐந்து பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றனர். அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இருவர் மாத்திரமே பிரதான வேட்பாளர்களாக இருந்தனர்.
ஆனால் இம்முறை முதன்முறையாக முன்று பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளமை உறுதியாகிவிட்டது. ஆனால் தமிழ்த் தரப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப் போகும் நிலைப்பாடு குறித்து சர்வதேசம் ஆவலோடு எதிர்ப்பார்க்கும்.
2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மக்கள் குறிப்பாக வடமாகாண மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்காமல் தவிர்த்திருந்தால் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பார்.
ஆனால், இந்தமுறை நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கு - கிழக்கு மக்களும் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதலாக வாக்களிக்கக் கூடிய சந்தா்ப்பங்கள் உண்டு.
எனினும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் வெறுப்பும் சலிப்பும் கொண்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிவிடக் கூடும்.
அவ்வாறு ஒதுங்கினால் தேர்தல் முடிவுகளில் நெருக்கடி ஏற்படலாம். ஏனெனில் ஒரே கொள்கையைக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்தவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் வெவ்வேறு கோணத்தில் நின்று போட்டியிட்டால், நிச்சயம் வாக்குகள் சிதறக்கூடிய அல்லது பௌத்த சிங்கள மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடையக் கூடிய நிலையும் வரலாம்.
அவ்வாறான நிலை உருவாகுமானால், இலங்கைத் தேர்தல் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான குறைந்தபட்ச 50 தசம் ஒரு வீத வாக்குகளைக் கூட எந்தத் தரப்பும் பெறமுடியாத நிலைமை ஏற்படும் சாதியங்கள் உண்டு.
ஆனால் மைத்திரி - மகிந்த மோதல் பௌத்த சிங்கள மக்களின் வாக்களி்ப்பு வீதத்தை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அது சில சமயங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வாக்குகளாகக் கூட மாற்றமடையலாமெனவும் தேசிய சமாதானப் பேரவையின் கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.