இலங்கையில் சீன முதலீடுகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை சமீபகாலமாக முன்வைத்து வருகின்றன. கடந்த நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட தினேஸ் குணவர்த்தன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) திட்டத்திற்கான புதிய உடன்படிக்கையில் தனக்கு உடன்பாடு இருக்கவில்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் வலுவடைந்து வருவதாக கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் (Xiquan Wang) தெரிவித்துள்ளார்.
மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதி சீ ஜின்பிங் (xi jinping) பிரதமர் லீ கயீங் (li keqiang) ஆகியோருடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன பயணத்தின்போது நடத்திய கலந்துரையாடல் ஒன்றில், இலங்கையில் சீனாவின் பொருளாதார திட்டங்களுக்கு கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி இடமளிக்கப்படும் என உறுதியளித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள், இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளதாக கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய அலுவலகங்களை இலங்கையின் கொழும்பு, அம்பாந்தோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைத்துள்ளதாகவும் இந்த கிளை நிறுவனங்கள், மாலைதீவு, நேபாளம். பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் உள்ள சீன வர்த்தக நடவடிக்கைகளை கன்காணிக்கும் என்றும் சுவான் வொங் கூறினார்.
இலங்கையின் கூடுதல் ஒத்துழைப்பினால் தெற்காசியாவில் முக்கிய வர்த்தக நாடாக இலங்கையை சீனா தெரிவு செய்துள்ளது என்றும் இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு விருத்தி, சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தல், விளையாட்டுத்துறைக்கான உதவிகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறை விருத்தி, நிதிசார் சேவைகளை பலப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு விருத்தி மற்றும் எதிர்கால இலக்குகளை மதிப்பீடு செய்தல், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தற்போதைய நிலைமையை அவதானித்தல், இலங்கையில் நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்புக்கான குழாய் வழிகளை பலப்படுத்தும் பெருந் திட்டம் மற்றும் கைத்தொழில் போன்ற துறைகள் சம்பந்தமான விடயங்களில் சினா கவனம் செலுத்தும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தைப் போன்றே அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் அதனுடன் சார்ந்த முதலீட்டு வலயங்களின் அபிவிருத்தி, கொழும்பு சுற்று வட்டப் பாதை, இரத்தினபுரி மற்றும் கண்டிக்கான அதிவேகப் பாதைகள், கண்டி வடக்கு மற்றும் கம்பஹா மினுவாங்கொடை நீர் வழங்கல் திட்டம், சிலாபம், புத்தளம் கழிவுப் பொருட்கள் முகாமைத் திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள் தொடர்பாகவும் இலங்கைப் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பிரகாரம் தொடர்ச்சியான பேச்சுக்க்கள் சீன, இலங்கை அதிகாரிகளிடையே இடம்பெற்று வருவதாக நிதியமைச்சின் உயர் அதிகாரி கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
சட்டவரையறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Bank of China எதிர்வரும் யூலை மாதம் தமது கிளையை திறக்கவுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
இலங்கையின் முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வளமாக சீனா மாறியுள்ளது எனவும் கடந்த ஆண்டு சீனாவில் இருந்து 270,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தமை இலங்கையின் பொருளாதாரத்தில் பிரதான வளர்ச்சி எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை போருக்கு உதவி செய்த சீனா. இலங்கை அரசுக்கு மேலும் கடன்களை வழங்குவதன் மூலம், இலங்கையின் ஒற்றையாட்சி முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர் குழு ஒன்றை சமீபத்தில் சினாவுக்கு அழைத்துச் சென்ற, கொழும்பில் உள்ள சீனத்துாரகம், அங்கு இலங்கையின் அபிவிருத்தி பற்றி வி்ளக்கமளித்ததாகவும் தமிழ் மக்களும் அந்த அபிவிருத்தி உதவிகளை கோர முடியும் என்று மாத்திரமே கூறியதாகவும் அந்த மூத்த பத்திரிகையாளர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.