புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதார போட்டிகள்

குர்திஸ்தான் மக்களுக்கு நேர்ந்த அவலம்- புலம்பெயா் தமிழர்களுக்கு பாடம்!

வள்ளுவன் நெறிப்படி உருவான கூட்டமைப்பு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பெருந்தேசியத்துக்குள் சிதைந்தது
பதிப்பு: 2023 பெப். 25 23:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 30 09:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் அதி உச்சத் தொடர் வெற்றிகளைக் கண்டுகொண்டிருந்த பின்னணியிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இன விடுதலைக்கான போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. எந்தவொரு போராட்டத்துக்கும் அரசியற் காரண காரியங்கள் உண்டு. இராணுவ ரீதியிலான போராட்டத்தின் வெற்றி ஒரு கட்டத்தை மேம்படுத்தும் போது, அதற்கு அடுத்த கட்டமாக அரசியல் ரீதியான அதுவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக் கூடிய நெறி முறைகளை நுட்பமாகக் கையாள வேண்டியது அவசியமானது. அதனை மையமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சமிக்ஞையைக் கொடுத்தனர்.
 
அங்கீகரிக்கப்படாத நிலையிலும் பலஸ்தீனம், தமக்கு எதிரான இஸ்ரேல் அரசுடனும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச நாடுகளுடனும் எந்தப் புள்ளியில் ஒன்றிணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்ற உத்தியைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் படித்து அதற்குரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும்

ஏனைய இயக்கங்களின் விடுதலை அரசியல் பாதை 1986 இல் இலக்கு மாறுவதாக உணரப்பட்ட சூழலிலேயே சகோதரப் படுகொலைகள் என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு உள்ளக மோதலாக மாறியது.

இருந்தாலும் அந்த மனக் குரோதங்கள் வலிகளைக் கடந்து, ஒருமித்த குரலாக மையம் கொண்டு தமிழ்த்தேசியக் கோட்பாட்டை மனதார ஏற்றுக் கொள்ளும் நியாயபூர்வமான அரசியல் பின்னணி 2001 இல் உருவானது

இப் புரிதல்தான் உண்மையான இன விடுதலை அரசியல். 1980 களில் இந்தியப் பெரும் தேசியச் சிந்தனையின் ஊடுருவல் வடக்குக் கிழக்கில் இயக்கங்கள் மத்தியில் அந்த உள்ளக மோதலை உருவாக்கியது.

2009 இற்குப் பின்னரான சூழலில் பலருடைய மனட்சாட்சிக்கு இந்தியப் பெரும் தேசியத்தின் அப்போதைய உள்ளக் கிடக்கை நன்கு புரிந்திருக்கும்.

ஆனால் 1986 இல் நடந்த சகோதரப் படுகொலைகள், கம்பராமாயணக் கதைகளில் வரும் சகோதரர்கள் ஒவ்வொருவரும், தத்தமது ஆட்சிக்காக வகுத்த சூழ்ச்சி – வஞ்சகம் போன்றதல்ல.

மாறாக வல்லரசுகள், தமது புவிசார் அரசியல் - பொருளாதாரத்தை மையப்படுத்திய பெருந் தேசிய விஸ்தரிப்புக்கு வசதியாகத் தூண்டிவிட்டமை பட்டவர்த்தனம்.

இதனை 2009 மே மாதத்திற்குப் பின்னரான வல்லரசுகளின் வடக்குக் கிழக்குத் தாயகத்தை மையப்படுத்திய இந்தோ - பசுபிக் பிராந்திய புவிசார் அரசியல் - பொருளாதாரப் போட்டிகள் நிறுவுகின்றன.

2001 இல் முன்னாள் இயக்கங்களை உள்ளடக்கி அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் (தற்போது தமிழரசுக் கட்சி) இணைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைத்துக் கையாண்ட அரசியல் நுட்பம் வள்ளுவன் வகுத்த நெறியில் அமைந்தது.

”அரசியல் விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக விழுமியங்களுடன் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தி அங்கீகாரத்தைப் பெறுவதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம்” என்ற தொனியில் சம்பந்தன், கொழும்பில் 2001 நவம்பரில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் விளக்கமளித்திருந்தார்.

வள்ளுவர் முடியாட்சியை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த முடியாட்சியில் குறிக்கீடுகள் இல்லாத ஒற்றை அதிகாரத்தை வள்ளுவர் ஏற்கவில்லை. ஒரு சமூகத்துக்கு அரசியல் அறம் உரித்தாக வேண்டுமானால், சில தியாகங்களைச் செய்தாக வேண்டும் என்பது போராட்ட விதி.

அதன்படி ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமூகம் உருவாகி அதற்குரிய இராணுவப் பலமும் நிரூபிக்கப்பட்ட பின்னர் பங்கேற்பு ஜனநாயகம் அவசியமானது.

அதனை வள்ளுவர் முன் நிறுத்துகிறார். அதற்கேற்பவே 2001 இல் கூட்டமைப்பு உருவானது என்றால் அதனை எவரும் மறுப்பதற்கில்லை.

'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்ற குறள் மூலம் பிறப்பில் உரிமைகள் அனைவருக்கும் சமம் என்ற அரசியல் நெறியை வள்ளுவர் உலகத்துக்கு அறிமுகம் செய்கிறார். பிறப்பில் சாதி, பணக்காரன், ஏழை என்ற பேதமைகள் இல்லை என்பதை வலியுறுத்தும் வள்ளுவர், முடியாட்சியை ஏற்றுக்கொள்கிறார்.

ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமூகம் உருவாகி அதற்குரிய இராணுவப் பலமும் நிரூபிக்கப்பட்ட பின்னர் பங்கேற்பு ஜனநாயகம் அவசியமானது. அதனை வள்ளுவர் முன் நிறுத்துகிறார். அதற்கேற்பவே 2001 இல் கூட்டமைப்பு உருவானது என்றால் அதனை எவரும் மறுப்பதற்கில்லை

ஆனால் அந்த முடியாட்சியில்தான் குறிக்கீடுகள் இல்லாத ஒற்றை அதிகாரத்தை வள்ளுவர் புறம் தள்ளுகிறார்.

ஆகவே போராட்டத்துக்கான சர்வதேச அங்கீகாரத்துக்காக ஒரு அரசற்ற இனம் ஒன்றின் தலைவனால், அரசியல் ரீதியான அடுத்த கட்ட நகர்வுக்காக குறைந்தபட்சம், தன் சமூகத்தில் இருக்கின்ற மிதவாத அரசியல் பிரதிநிதிகளையும் முன்னாள் இயக்கங்களையும் இணைக்கத்தான் முடியும்.

இந்த இடத்திலேதான் 1986 இல் நடந்த சகோதரப் படுகொலைகளுக்குப் பின்னரான - ஒரு குடையின் கீழான ஆயுதப் போராட்டமும், 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ்த்தேசியத்துக்கு அவசியமான ஜனநாயக விரிவாக்கமும் வள்ளுவன் வகுத்த அரசியல் ஒழுக்கத்தை உணர்த்தியிருந்தது.

அரிஸ்ரோட்டில் போன்ற அரசியல் அறிஞர்கள், மன்னன் அதிகாரத்திற்கு அரண் செய்யும் வகையிலேயே நெறிகளை வகுத்தனர். கௌடில்யர் படைத்த அர்த்தசாத்திரமும் அவ்வாறுதான் வகுக்கப்பட்டிருந்தது. மக்கள் உரிமைகளைக்கூட இவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இனப் பிரிவுகளை வகுத்து அதன் ஊடே வேறுபட்ட உரிமைகளை மாத்திரமே வழங்கினர். மக்களுக்கு அடிமை வாழ்க்கையை வழங்கினர்.

ஆனால் வள்ளுவர் அடிமை வகுப்பு வாழ்க்கையை ஒப்புக்கொள்ளவில்லை.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் தமிழக அரசர்களுக்கு அவ்வப்போது எடுத்துக்கூறிய அறிவுரைகள் இலக்கியங்கள் மூலமாகவே அமைந்திருந்தன. அந்த அறிவுரை வழியாக வந்த சிறப்புடை மரபுகள் ஊடே நல்லாட்சி நடந்தது. இதனைக் குன்றக் குடி அடிகளார் 'வள்ளுவரின் அரசியல்' என்ற சொற்பொழிவில் மேலும் விரிவாகச் சித்தரிக்கிறார்.

ஒரு போராட்டத்தின் வெற்றி – தோல்வி ஏனைய போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்துகிறது. இலங்கை அரசு 2009 இல் ஈழப் போரை இல்லாதொழித்த வழிமுறையைத் தாம் பின்பற்றப் போவதாக துருக்கிய ஜனாதிபதி எர்டகோன் அன்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு நடந்த பேரழிவு, குர்திஸ்தான் இன போராளிகளுக்கும் மக்களுக்கும் இன்றுவரை பின்னடைவுதான்.

தமிழர்கள் போன்று குர்திஸ்தான் மக்கள் புலம்பெயர்ந்து சுவீடன், பின்லாந்து நாடுகளில் வாழுகின்றனர். நிரந்தப் பிராஜவுரிமையுடன் வாழும் குர்திஸ்தான் மக்களுக்குத் தற்போது புதுப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையப்படுத்திய நேட்டோ இராணுவ அணியில் இணைய சுவீடன் - பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்ததால், நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கி, சுவீடன் - பின்லாந்து அரசுகளுக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளது.

அதாவது இந்த நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ள குர்திஸ்தான் மக்களை மீண்டும் துருக்கிக்கு அனுப்ப வேண்டுமெனக் கோரியுள்ளது.

நேட்டோ அணியில் ஒரு நாடு இணைய வேண்டுமானால், அதில் அங்கம் வகுக்கும் ஒரு நாடு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுச் செயற்படுத்த வேண்டும் என்பது அவர்கள் வகுத்திருக்கும் அரசியல் ஒழுக்கம்.

ஜூன் 28, 2022 அன்று ஸ்பெயினில் நடந்த மாநாட்டில் இரு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதற்குத் தமது நிபந்தனைகளுக்கு ஏற்ப துருக்கி ஒப்பமிட்டுள்ளது. இதனால் குதிர்ஸ்தான் மக்களை நாடு கடத்தும் பணியை சுவீடன் ஒரு மாதத்திற்கு முன்னா் ஆரம்பித்துள்ளது.

குர்திஸ்தான் போராளிகள் அங்கு தஞ்சமடைந்துள்ளனர் என்பதே துருக்கியின் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இதனால் அரசியல் தஞ்சம் கோரியுள்ள குர்திஸ்தான் ஊடகவியலாளர்கள்கூட நாடு கடத்தப்படுகின்றனர்.

ஆகவே இதுதான் புவிசார் அரசியல். இந்த அணுகுமுறையைத்தான் இலங்கை அரசும் 2009 இற்குப் பின்னர் பின்பற்றி வருகின்றது. இலங்கைத்தீவில் தமக்குரிய புவிசார் அரசியல் தேவைகளை நிறைவேற்ற, வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாட்டை நிராகரித்து, இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் வாழ்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அமெரிக்க - இந்திய அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.

தமது புவிசார் அரசியலுக்குத் தேவையான முறையில் இலங்கையுடன் அரசுக்கு அரசு என்ற இராஜதந்திர அணுகுமுறையில் அரசியல் விடுதலை வேண்டி நிற்கின்ற ஈழத்தமிழர்கள் பற்றி அமெரிக்க - இந்திய அரசுகளுக்குக் கவலை இல்லை என்பதையே, 2012 ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டு வரும் இலங்கை பற்றிய தீர்மானங்களும் சுட்டி நிற்கின்றன.

எனவே சுவீடனில் இருந்து தற்போது குர்திஸ்தான் மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் ஆபத்தான நிலைமை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகவே உண்மையான அரசியல் அறம் உலகில் இல்லை என்பது புரிகிறதல்லவா?

ஸ்பெயினில் நடந்த மாநாட்டில் சுவீடன், பின்லாந்து நாடுகளை நேட்டோவில் இணைப்பதற்குத் தமது நிபந்தனைகளுக்கு ஏற்ப துருக்கி ஒப்பமிட்டுள்ளது. இதனால் குர்திஸ்தான் மக்களை நாடு கடத்தும் பணியை சுவீடன் ஆரம்பித்துள்ளது

அரிஸ்டோட்டல், கௌடில்யர் ஆகியோர் வகுத்த மன்னருக்கான முடியாட்சித் தன்மை கொண்ட அரசியல் அறம்தான் இன்று உலகில் ஜனநாயகம் என்ற பெயரில் வல்லரசுகளினால் அரங்கேற்ப்படுகின்றன.

இப் புவிசார் அரசியல் தந்திரோபாயங்களை முன்கூட்டி அறிந்தே 1986 இல் தமிழ்த்தேசிய நாகரிகம், ஒரு நிலைப்பட்ட கொள்கை என்ற தெரிவை உள்வாங்கிக் கொண்டது. ஆனாலும் வள்ளுவ நெறிப்படி பன்முகத்தன்மை கொண்ட அரசியல் நெறிக்கு 2001 இல் வழி திறந்துவிடப்பட்டது.

அதன் வகிபாகத்துக்கு அப்போது புளொட், ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டு ஒத்துழைப்பை நல்கியிருந்தன. இருந்தாலும் 1986 இல் நடந்த சகோதரப் படுகொலை என்ற கசப்பான உண்மைகளை மறக்க முடியாது.

மாற்றுக் கொள்கை என்ற பெயரில் இலங்கை அரசு - இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்க - இந்திய அரசுகள் என்ற எதிர்நிலைப் பக்கங்களில் நின்று 2009 மே மாதம் வரையும் போரை இல்லாதொழிப்பதற்குத் துணைபோன காரியங்களும் ஏராளம்.

கம்பராமாயணக் கதையில் வரும் சகோதரப் படுகொலைகளை அரசியல் அறம் என்று வாதிடும் சில அறிஞர்கள், தமிழர்களின் முப்பது வருட ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திச் சகோதரப் படு கொலைகளையும், 2009 இல் தமிழ்த்தேசியம் விட்ட தவறு எனவும் இட்டுக்கட்டி நிரப்பி பெருந்தேசியவாதத்துக்கு ஒத்துழைக்கின்றனர்.

இந்தப் பின்புலத்திலேதான் 2001 இல் இராணுவ மற்றும் ஒருமித்த குரல் பலத்தின் மூலம் ஜனநாயக விழுமிய நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட பன்முகத் தன்மையுடைய தமிழ்த்தேசிய அரசியல் நாகரிகத்தை, 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகள், பெரும்தேசியவாதத் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனரென அர்த்தம் கொள்ள முடியும்.

அதாவது அமெரிக்க - இந்திய அரசுகளின் கைப்பிள்ளைகளாகத் தம்மை மாற்றி, 1986 ஆம் ஆண்டுக்கு முன்னரான இந்தியப் பெருத்தேசியத்திற்குள் ஈழத்தமிழர்களைக் கரைத்துவிட வேண்டுமென்ற புதுடில்லியின் சிந்தனைக்குள் மீண்டும் அமுங்கிவிட்டனர் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

கண் முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பலஸ்தீனப் போராட்டம் சரியான திசையில் சென்று வெற்றி பெறுமானால், அது தமிழர்களுக்கும் சாதகமாகவே அமையும் என்ற அரசியல் புத்தியைக்கூட தமிழ்த்தேசிய கட்சிகள் வகுக்கவேயில்லை.

போராட்டச் சூழ்நிலை – இடங்கள் – போக்குகள் எனப் பல்வேறு தனிப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இடத்துக்கு இடம் இருக்கும் தனித்துவமான காரணிகளை உள்வாங்கத்தான் வேண்டும். உதாரணமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையும், பலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கையும் வேறுபாடுகள் கொண்டவை.

பலஸ்தீனர்கள் பிரிந்துபோகும் உரிமையைக் கோரவில்லை. மாறாகத் தமது நாட்டை இஸ்ரேல் அபகரிப்பதற்கு எதிராகவே போராடுகிறார்கள். பலஸ்தீனர்களும் யூதர்களும் தத்தமது தேசிய அபிலாசைகளைப் பங்கிட்டுக் கொள்வதில் சிக்கலான கேள்விகள் இன்று வரை அங்கு தொக்கி நிற்கின்றன.

ஆனால் பொதுத் தன்மைகளும் அங்கு ஏராளம். 2020 இல் கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்கம் ஏற்பட்டபோது, இஸ்ரேல் அரசுடனும் இஸரேலுக்கு ஆதரவான நாடுகளுடனும் பலஸ்தீன ஆட்சியாளர்களான கமாஸ் ஒத்துழைத்திருந்தது.

2001 இல் இராணுவ மற்றும் ஒருமித்த குரல் பலத்தின் மூலம் ஜனநாயக விழுமிய நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட பன்முகத் தன்மையுடைய தமிழ்த்தேசிய அரசியல் நாகரிகத்தை, 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகள், பெரும்தேசியவாதத் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனரென அர்த்தம் கொள்ள முடியும்

ஆனால் கமாஸ் இயக்க ஆட்சியை ஐக்கிய நாடுகள் சபை இதுவரை அங்கீகரிக்கவில்லை. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திப் பலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்ற அரசியல் அறத்துக்கு மாறான அநீதியான செய்திதான் கமாஸ் இயக்கத்துக்குத் தொடர்ச்சியகச் சொல்லப்படு வருகின்றது.

இருந்தாலும் கமாஸ் தமது கோரிக்கையில் இருந்து ஒரு துளியேனும் விட்டுக் கொடுக்கவில்லை. எனினும் சர்வதேச விதிகள் பலவற்றுக்கு ஏற்பத் தமது ஜனநாயக விழுமியங்களைக் கமாஸ் செயற்படுத்தி வருகின்றது. ஆனால் கமாஸ் இராணுவம் இன்னமும் பயங்கரவாத அமைப்பாக வல்லரசுகளினால் பார்க்கப்படுகின்றது.

ஆகவே பலஸ்தீனர்களின் எதிரி இஸ்ரேலிய அரசு மட்டுமல்ல, பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸரேல் அரசின் கோட்பாட்டுக்கு ஆதரவு கொடுக்கும் அத்தனை நாடுகளும் பலஸ்தீனத்துக்கு எதிரிதான்.

இப் புரிதலோடுதான் சர்வதேசத்தினால் தாம் அங்கீகரிக்கப்படாத ஒரு பின்னணியில் வல்லரசுகளுக்கு இசைவான ஜனநாயக விழுமியங்களையும் அரசியல் உத்திகளையும் கமாஸ் இயக்கம் நெறிப்படுத்தி தம்மை மேலும் செம்மைப்படுத்தி வருகின்றது.

இத் தெளிவு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் அவசியம். இலங்கை ஒற்றையாட்சி அரசு மாத்திரமே எதிரி என்ற குறுகிய பார்வையைத் தவிர்த்து, இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அத்தனை நாடுகளும் எதிரிதான் என்ற அரசியல் நோக்கு அவசியமானது.

பலஸ்தீனம் எதிரியாகவுள்ள இஸ்ரேல் அரசுடனும், இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச நாடுகளுடனும் எந்தப் புள்ளியில் ஒன்றிணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்ற உத்திகளைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் படித்து அதற்குரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

மாறாக இலங்கையை மாத்திரம் எதிரியாகக் கருதி கண்ணைமூடிக் கொண்டு அமெரிக்க - இந்திய அரசுகள் சொல்வதற்குத் தலையசைப்பது தமிழ்த்தேசிய மீட்சிக்கான அரசியல் அல்ல.

இராமாயணக் கதையின் முடிவில், சகோதரப் படுகொலைகள் அதற்காக நடந்த வஞ்சகங்கள் - சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் மறந்து ஒருமித்த குரலில் எவ்வாறு தேசத்தைக் காக்க வேண்டுமெனக் கம்பன் கூறும் இலக்கிய நயம் தமிழ்த் தேசிய நாகரிகத்துக்கு மிகப் பொருத்தமானது.

அதாவது தீமைகள் தோன்றுதலைத் தவிர்க்க முடியாது. அவை படைப்பின் செயற்பாடு. ஆனாலும் தீமைகள் நிலைத்துநின்று வெற்றி பெறுவதில்லை என்பதை வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார் என்ற பாடல் மூலம் கம்பன் ஜனநாயகத்தின் ஊடான சகிப்புத் தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை உலகத்துக்குப் போதிக்கிறான்.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி!

இது கம்பன் படைத்த இராமாயணக் கதையின் இறுதிப் பாடல்.

'ஒருமித்த குரல்" என்ற அரசியல் அறம்தான், தேசத்தை மீட்கும் என்ற வள்ளுவன் வாக்கை கம்பன் அறியாதவன் அல்ல.

குறிப்பு - குர்து மொழியைப் பேசும் மக்கள், தாம் வாழும் நிலப்பரப்பைக் குர்திஸ்தான் என்று அழைக்கின்றனர். குர்திஸ்தான் பகுதி துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியே குர்து மக்கள் போராடி வருகின்றனர்.