டிச. 14 19:28
(கிளிநொச்சி, ஈழம்)
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கைப் படையினரும் அதிகாரிகள் சிலரும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி இயக்கச்சிச் சந்தியில் இன்று சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.