கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
செப். 13 19:14

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.
மார்ச் 17 18:29

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இன அழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

(வவுனியா, ஈழம்) போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
ஒக். 02 18:47

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த பொதுக்கட்டமைப்பினர் பொறுப்புக்கூறலுக்குரியவர்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) 'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது போல் ஈழத்தமிழர் தேசத்தினர் மீண்டும் தமது உரிமைக்காக எழுச்சிபெற்று அணிதிரள்வார்கள் என்பதை ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தின் ஊடாக நிறுவினார்கள். இருப்பினும், வடக்கு-கிழக்கில் மேலதிகமாக முப்பதினாயிரம் வாக்குகள் பா. அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்குக் கிடைத்திருந்தால் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஜனாதிபதியாகியுள்ள அநுர குமார திசாநாயாகாவை விட தமிழர் தாயகத்தில் சங்குச் சின்னம் முன்வைத்த கொள்கைக்குக் கூடுதலான அங்கீகாரம் இருப்பது வாக்குகள் ஊடாக உறுதிப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கும். சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைக் கனதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.
செப். 25 18:34

ஈழத் தமிழர் தேசத்துக்குத் தனித்துவமான சமவுடைமை இயக்கம் காலத்தின் தேவை

(வவுனியா, ஈழம்) 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூதுகவ்வலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
செப். 17 09:38

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறைத் தன்மைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பொதுச்சபையின் நேரடித் தன்மை

(முல்லைத்தீவு, ஈழம்) ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எந்தக் கருத்துநிலையை முரசறைந்து வலியுறுத்துகிறார்கள் என்பது தென்னிலங்கைக்கும் உலக மட்டத்துக்கும் அவசியமானது. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.