ஆனால் சிங்கள மீனவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அமைச்சர் விஜயமுனி செய்சா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரையும், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குறை கூறினர். தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.
அமைச்சரின் உறுதிமொழி பொய்யா? எம்மை ஏமாற்றி விட்டார், இலஞ்சம் வாங்கி எம்மை அழிக்காதே, சட்டவிரோத மீன்பிடித் தொழிலை முற்றாகத் தடை செய் என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளை மீனவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரி ஒருவரைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா ஆகியோருக்கான மகஜர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் கையளித்தனர்.
நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா ஆகியோரை சந்திக்க ஏற்பாடுகளை செய்து தருவதாக சாந்தி சிறிஸ்கந்தராஜா இதன்போது உறுதியளித்தார்.
ஆனாலும் அந்தச் சந்திப்பில் நம்பிக்கையில்லையென மீனவர்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 2ஆம் திகதி மீனவர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
ஆனால், இலங்கை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
தென்பகுதியில் இருந்து வந்து கொட்டில்கள் அமைத்திருந்த சிங்கள மீனவர்களும் இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில், சட்ட விரோத மீ;ன்டிபிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான செய்திகளையடுத்து முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் ஓகஸ்ட் 13 ஆம் திகதி இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.
தென்பகுதி சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் அனுமதியின்றியும் சட்டவிரோதமாகவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறு எரிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் ஏனைய கடற் பகுதிகளிலும் பலாத்காரமாகத் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இதுவரை வெளியேறவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
சட்டத்திற்கு முரணாக இலங்கை மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பாதாகக் குற்றம் சுமத்தியே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கான ஜிஎஸ்எபி வரிச்சலுகையை ரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.