வேட்பாளர் தெரிவில் நேற்றுப் புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்தனர். அந்த முடிவு குறித்து மத்திய குழுவுடன் இன்று கலந்துரையாடிய பின்னர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச பிளவுபடாத ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதே தனது நோக்கமெனக் கூறினார்.
2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது மற்றுமொரு நோக்கம் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
அதேவேளை, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமெனக் கூறப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தை சஜித் பிரேமதாச தனது வீடமைப்புத்துறை அமைச்சின் ஊடாக நிறைவேற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் சஜித் பிரேமதாசவிடம் உருப்படியான திட்டங்கள் எதுவுமேயில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக உரையாடியபோது கூறியிருந்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று அறிவிக்கப்பட்டார். சிங்கள பௌத்த ஆட்சியே தற்போது இலங்கைக்கு அவசிமானதென்று சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் சென்ற 17 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் வேட்பாளராக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா அறிவிக்கப்பட்டார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 பேர் போட்டியிடலாமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.