ஆனாலும் அம்பாந்தோட்டை மற்றும் வடக்கு- கிழக்கு தாயகப் பகுதிகளில் உள்ள கடற் பிரதேசங்களில் ஜப்பான் கடற்படையினரும் இலங்கை கடற்படையினரும் ஒத்துழைத்துச் செயற்படுவது குறித்து பேசப்பட்டதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
பிராந்தியத்தில் இராணுவ ஒத்துழைப்புக் குறித்துப் புதுடில்லியில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் நடத்திய பேச்சுக்கள் குறித்தும் மைத்திரிபால சிறிசேனவுடன் பேசப்பட்டதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக்குப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளோடும் பேசப்பட்டுள்ளது.
ஜப்பானியப் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேராவுடன் கொழும்புக்கு வருகை தந்துள்ள ஜ்ப்பான் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் 19 பேரும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட அரசியல். பொருளாதார பிரச்சினைகளில் எதிரும் புதிருமான முரண்பாடுகளுடன் செயற்பட்டு வரும் சீனா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் ஏட்டிக்போட்டியாக இலங்கையில் காலபதித்துள்ளதாக அவதானிகள் கூறியுள்ள நிலையில், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா உள்ளிட்ட 19 உயர்மட்ட அதிகாரிகளின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது.
இட்சுனோரி ஒனேடேரா கொழும்பு்க்கு நேற்றிரவு வருகை தந்த அதேவேளை, ஜப்பான் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.
இகாசுச்சி (Ikazuchi) என்ற போர்க் கப்பலே திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி யோகோ அசுமா, இலங்கைக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக் கடற்படைக்கு வழங்கவுள்ள பயிற்சிகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜப்பான் போர்க் கப்பல் நான்கு நாட்கள் வரை திருகோணமலைத் துறைமுகத்தில் தங்கி நிற்கவுள்ளது.
இதேவேளை, சீனாவுடன் அரசியல், பொருளாதார ரீதியாக நெருங்கிய உறவைக் கொண்டுள்ள மைத்திரி- ரணில் அரசாங்கம். ஜப்பான் மேற்கொண்டுள்ள புதிய நகர்வினால் குழப்பமடைந்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழர்களின் அரசியல் போராட்டத்தை ஆயுதத்தால் அழிப்பதற்கு எதிரும் புதிருமான அரசியலில் ஈடுபடும் சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளிடம் அனைத்து உதவிகளையும் பெற்ற இலங்கை அரசாங்கம், தற்போது இந்த நாடுகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.