இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமான மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் அரச செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் மகஜர் ஒன்றை பெற்றுக் கொண்டானர்.
காணாமல் ஆக்கப்பட்டு ஆண்டுகள் பல சென்ற பின்னரும் கூட நல்லாட்சி என்று கூறிக் கொண்டு இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளது என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் அமைதியாக இருக்கின்றார்? பதில் சொல்லுங்கள் என்று எழுதப்பட்ட வாசகங்களையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே? ஏன்று உறவினர்கள் கேள்வி தொடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்களான பிரான்சிஸ் ஜோசப், நிகால் ஜிம்பிறவுண் ஆகிய இருவரது படங்களையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் பங்குபற்றினர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி சரியான பதிவுகள் இல்லாதபோதும் சுமார் 30 ஆயிரம் பேர்வரை வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் மற்றும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் சங்கம் கூறுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடத்தது என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது.
காணாம்ல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதே தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.