(முல்லைத்தீவு, ஈழம்)
கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு- நாயாறு பிரதேசத்திற்குத் தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்களிற்கே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என முல்லைத்தீவில் உள்ள இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்ரதரவையும் மீறிக் கொழும்பின் செல்வாக்குடன் சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.