பெப். 05 14:20
(கிளிநொச்சி, ஈழம்)
2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரச திணைக்களங்கள் இதனை உரிய வகையில் கையாளத்தவறுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு உரிய காலத்தில் பதில் வழங்கத் தவறிய கிளிநொச்சி மாவட்ட செயலகம், ஒன்றரை மாதத்தின் பின்னர் அதுவும் கூர்மைச் செய்தித் தளம் கண்டித்து வெளியிட்ட செய்தியின் பின்னரே உரிய பதிலை வழங்கியுள்ளது. குறித்த பதில் கடிதம் 2019.01.23 ஆம் திகதி அச்சிடப்பட்டு 2019.02.05 ஆம் திகதி அன்று, விண்ணப்பதாரியான கூர்மையின் செய்தியாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.