செய்தி: நிரல்
ஒக். 04 22:39

மன்னாரில் கைதான இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதினால் இறந்தவரின் குடும்பத்தினர் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸாரே பிரஸ்தாப நபரை அடித்து கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இறந்தவரின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒக். 03 22:33

நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்கும் செயற்திட்டம்- சட்டத்தரணிகளின் பெயர்கள் வெளியீடு

(வவுனியா, ஈழம்) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கும் அணுகுமுறை ஒன்றைக் கையாண்டு வரும் தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் இரண்டாவது அறிக்கையில் ஐவர் கொண்ட சடடத்தரணிகள் குழுவின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத் தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம் குறித்து இன்று தங்கட்கிழமை மாலை இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளை, அல்லது கூட்டமைப்பு மற்றும் முன்னணிகளை, கட்டமைப்பு ரீதியாக இணைக்கும் முன்னெடுப்பாக விளங்கிக்கொள்ள வேண்டாமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒக். 03 20:12

பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்- ஆளுநர் உட்பட ஏழுபேருக்கு நீதிமன்றம் கட்டளை

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் (Writ of Mandamus) பிரதிவாதிகளாகக் குறிப்பிடப் பட்டுள்ள வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட எழுவரை எதிர்வரும் 27ஆம் திகதியன்று மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீரின் ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை காரணமாக, அது குறித்து வட மாகாண ஆளுநருக்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வட மாகாண ஆளுநரினால் அவரின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
ஒக். 02 09:34

ஜயசுந்தர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளாராகவும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய பி.பி ஜயசுந்தர அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்புக்குத் திரும்பியதும் ஜயசுந்தர பதவி நீக்கப்படுவாரென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.
ஒக். 01 09:26

கொவிட் தடுப்பு நடவடிக்கை- புதிய விதிகள் அமுல்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்குப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதில் இருந்து இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட சான்றிதழ் அட்டைகள் வைத்திக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நடைமுறை தற்போதைக்கு அமுலுக்கு வராதெனவும் இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.