(வவுனியா, ஈழம்)
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்து தமக்கு இசைவான ஆட்சியாளர்கள் என்று நம்பியே நல்லாட்சி என்று கூறி மைத்திரி- ரணில் கூட்டு உருவாக்கப்பட்டது. மாற்றம் என்ற சூடு காய்வதற்கு முன்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச உருவாக்கிய 18 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஜனாதிபதிக்குரிய சர்வாதிகாரத் தன்மைகள், 2016 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன.